கால்பந்து மைதானத்தில் பொழிந்த ‘பொம்மை மழை’.. துருக்கி குழந்தைகளுக்காக கைகோர்த்த ரசிகர்கள் ; நெகிழ்ச்சி வீடியோ!

Author: Babu Lakshmanan
28 February 2023, 8:11 pm

துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக கால்பந்தாட்டப் போட்டியின் பார்வையாளர்கள் பொம்மைகளை மைதானத்தில் தூக்கி எறிந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த பிப்ரவரி 6ம் தேதி சிரியா – துருக்கி எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 50,000-ஐ கடந்துள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இரு நாடுகளுக்கும் உலக நாடுகள் நிவாரண மற்றும் மீட்பு பணி உதவிகளை செய்து வருகின்றன. எனவே இந்த பேரிடரில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வர துருக்கி முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், துருக்கியின் பெசிக்டாஸ் நகரில் உள்ளூர் கால்பந்து கிளப்புகளான பெசிக்டாக்ஸ் – ஆண்டலியாஸ்போர் அணிகளுக்கு இடையே மோதின. இரு அணிகள் இடையே நடந்த போட்டி 4 மணி 17 நொடிகளுக்குப் பிறகு நிறுத்தப்பட்டது ( பிப் 6 ஆம் தேதி 4.17 மணியளவில்தான் துருக்கி – சிரிய எல்லை பூகம்பம் ஏற்பட்டது) அப்போது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் தாங்கள் கொண்டு வந்த பொம்மைகளை மைதானத்தில் தூக்கி எறிந்தனர்.

இந்த பொம்மைகள் அனைத்தும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்று பெசிக்டாஸ் அணி தெரிவித்துள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?