கவுன்சிலர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்… 26 சவரன் நகை, ரூ.5.75 ரொக்கப் பணம் திருட்டு!!!

Author: Udayachandran RadhaKrishnan
4 May 2023, 4:53 pm

திண்டிவனம் கவுன்சிலர் வீட்டின் பூட்டை உடைத்து 26 சவரன் தங்க நகைகள், 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டிவனம் மகாத்மா காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் வழக்கறிஞர் ராம்குமார்(39). திண்டிவனம் 24 வது வார்டு கவுன்சிலரான இவர், திண்டிவனம் அடுத்த தென் பசார் கிராமத்தில் நாகாத்தம்மன் கோயில் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் நிர்வாகியாக இருந்து வருகிறார்.


திண்டிவனத்தில் குடும்பத்தாருடன் வசித்து வரும் இவர், அவ்வப்போது கோயில் அருகே உள்ள வீட்டிலும் தங்கி இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை சென்னையில் நடைபெற்ற உறவினரின் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.

இன்று மதியம் ராம்குமாரின் மனைவி கெஜலட்சுமி கோயில் அருகில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் முன்பக்க கேட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, உள்ளே மரக்கதவில் இருந்த தாழ்ப்பால் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் உள்ளே சென்று பார்த்த போது மூன்று அறைகளில் வைக்கப்பட்டிருந்த பீரோவை உடைத்து, அதிலிருந்த 26 சவரன் தங்க நகைகள், 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், எல்இடி டிவி, பத்திரங்கள் உள்ளிட்டவை திருடு போனது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் காவல் நிலைய போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

  • 5 consitions to aamir khan in the release of sitaare zameen par movie படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?