மிக்ஸி, லேப்டாப்பை உடைச்சாரு… இன்னைக்கு அவரே வைர நெக்லஸ் கொடுக்கிறாரு ; முடிவை மாற்றிய நடிகர் விஜய்… அதிமுக எம்எல்ஏ பளீச்..!!

Author: Babu Lakshmanan
24 June 2023, 2:01 pm

500 மதுபான கடைகள் மூடப்பட்டாலும் தனியார் மதுபான கடைகள் கூட்டப்பட்டு விட்டதாகவும், கிளப் என்ற பெயரில் நிறைய மதுக்கடைகளை திறந்து விட்டதாக திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நாகமலை புதுக்கோட்டை, ஆலங்குளம், நிலையூர், கீழக்குயில்குடி, திருப்பரங்குன்றம், நெடுங்குளம், பனையூர், , பெரிய ஆலங்குளம், உள்ளிட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை மற்றும் நிழற்குடை திறப்பு விழாவில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும் கழக அமைப்புச் செயலாளருமான ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கே சி பி ஜெயக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நடிகர் விஜய், அஜித் அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டின் சாபக்கேடு என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் அம்மாவைப் போல யாரும் திரைப்படத் துறையில் இருந்து அவர்களைப் போல் இணையாக வந்துவிட முடியாது. விஜய்யையும் நலத்திட்டங்களை வழங்கி அரசியலுக்கு வருவார் என்பது போல் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நலத்திட்டம் என்பது மக்களுக்கு பொதுவான விஷயம். அதை யாரும் மறுப்பதில்லை. மாணவர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். இதே மதிப்பிற்குரிய நடிகை விஜய் அவர்கள் அவரின் சர்க்கார் படத்தில் மடிக்கணினியை உடைப்பதும், மிக்ஸியை உடைப்பதுமாக இருந்தது. அதை நாங்கள் போராடி அந்த காட்சியை அகற்றினோம். இது குறித்து போராட்டம் மதுரையில் தான் நடைபெற்றது.

அம்மா கொண்டு வந்து திட்டங்களை அவர் படத்தில் இழிவுபடுத்தி அன்னைக்கு அந்த திரைப்படத்தில் அவர் கொண்டு வந்தார். இன்று அவரே மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் மூலம் 5,000 வழங்கியும், வைர நெக்லஸ் வழங்கியும் இருக்கிறார். எனவே நாங்கள் அதை வரவேற்கிறோம். அன்றைக்கு மடிக்கணினி, மிக்ஸி குறித்து அவர் படத்தில் கொண்டு வந்ததை, இப்போது அவர் திரும்ப பெற்று இருக்கிறார். நாங்கள் அப்போது திரும்ப பெற வைச்சோம். அதிமுக எந்த நடிகர் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம். நாங்கள் சிவாஜி கணேசன், டி ராஜேந்திரன், பாக்யராஜ் அனைவரையும் தமிழக அரசியல் பார்த்துவிட்டது, எனக் கூறினார்.

கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் அதிமுகவினர் மழைநீர் வடிகால் குறித்து எந்த பணியும் மேற்கொள்ளாததால், இந்த நிலை என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்ததாவது :- மழைநீர் வடிகால் குறித்து நாங்கள் ஏற்கனவே வகுத்த திட்டம் தான் நடந்து கொண்டிருக்கிறது. திமுகவினர் புதிதாக வந்து எந்த ஒரு மழை நீர் வடிகால் வாய்க்காலை ஆரம்பிக்கவில்லை. மழைநீர் வடிகால் என்பது அம்மா காலத்தில் உருவான ஒரு சிறப்பான திட்டம். இதை முழுவதுமாக வழிநடத்தியது முன்னாள் மாநகராட்சி அமைச்சர் வேலுமணி அவர்கள் தான்.

பல்வேறு திட்டங்கள் மூலமாக சென்னைக்கு அதிகமான நிதியை கொடுத்தது அதிமுகதான். நாங்கள் உருவாக்கிய திட்டத்தை தான் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் முடியவில்லை. இது ஒரு நாள் மழை தான். சென்னையில் ஒரு நாள் மழைக்கு அமைச்சர் இவ்வளவு தூரம் ஸ்டேட்மெண்ட் கொடுக்க வேண்டிய அவசியம் வந்திருக்கிறது. இதுவரை பேரிடர் மேலாண்மைக்கு ஏதாவது ஒரு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறதா? எங்கே சொல்ல சொல்லுங்கள், திட்டங்களை கூறுகிறார்களே தவிர, மழைநீர் வடிகால் வாய்க்காலுக்கோ, பாதாள சாக்கடை திட்டத்துக்கோ, இதுவரை தமிழகத்தில் எங்கும் நிதி ஒதுக்கியதாக வரலாறு இல்லை.

தமிழகத்தில் திமுகவினர் எங்கும் நிதி ஒதுக்கியதாக வரலாறு இல்லை. அவர்கள் நிதி ஒதுக்கியது கருணாநிதியின் நூலகத்தின் ஏழு மாடி கட்டிடத்திற்கும், பேனா சின்னம் அமைப்பதற்கு 72 கோடி ரூபாயும், கருணாநிதி மணி மண்டபத்திற்கு 50 கோடி ரூபாயும், தனது சொந்த நிதி என்ற பெயரிலே திருவாரூரில் 12 கோடி தான் ஒதுக்கி இருக்கிறார்கள். தவிர மக்கள் நல திட்டங்களுக்காக மக்களை அடிபடுத்திகளுக்காக, எந்த ஒரு நிதியும் திமுக அரசு ஒதுக்கப்படவில்லை. திமுக அரசு ஆசிரியர் வந்ததிலிருந்து எந்த ஒரு திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. அதைப் பட்டியலிட நானும், என் தலைவர்களும் தயாராக இருக்கிறோம். அவர்களும் அமைச்சர் கே கே சாரும் தயாராக இருக்கிறார்களா என்று கேட்டு கூறுங்கள், எனக் கூறினார்.

சீமானை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீதும் திமுக குறித்த அவதூறு பேசியதாக வழக்கு பதிய உள்ளது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- திமுக அரசின் வழக்குகளை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி தயாராக இருக்கிறார். அவரை பொறுத்தவரைக்கும் மடியில் கனமில்லை என்று தெளிவாக கூறியிருக்கிறார். செந்தில் பாலாஜி அண்ணன் வழக்கு என்பது ஐந்தாண்டுகளாக தொடர்ந்து இருக்கிறது. இன்று அமலாக்கத்துறையில் இருந்து தப்பிக்க அமைச்சர் வழி பார்க்கிறார். இது போன்ற வழக்குகளுக்கு எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சுபவர் இல்லை. கொடநாடு வழக்கு குறித்தும் அவர் தெளிவாக கூறியுள்ளார். குற்றவாளிகள் யார் என்று அண்ணா திமுக தான் அடையாளம் காண்பித்தது. எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு போடுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை, என்றார்.

500 மதுபான கடைகள் மூடியது, செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கைதை மறைப்பதற்காக என்று புதிய தமிழக கட்சி கிருஷ்ணசாமி கூறியது குறித்த கேள்விக்கு அவர் பதில் கூறியதாவது :- அமைச்சர் செந்தில் பாலாஜின் கைதை மறைப்பதற்காக திமுகவினர் பல்வேறு திசை திருப்பங்களை ஏற்படுத்தி உள்ளனர். 500 மதுபான கடைகள் மூடப்பட்டாலும் தனியார் மதுபான கடைகள் கூட்டப்பட்டு வருகிறது. கிளப் என்ற பெயரில் நிறைய மதுக்கடைகளை திறந்து விட்டார்கள். 500 மது கடைகளை அவர்கள் மூடியது எதுவென்றால், வியாபாரம் கம்மியாக உள்ள கடைகளை மட்டும் தான் கணக்கிட்டு மூடி உள்ளார்கள்.

காரணம் என்னவென்றால் கடை வாடகை மிச்சப்படுத்தவும், கடைக்கு ஊழியர் சம்பளத்தை மிச்சப்படுத்தவும் மேற்கொண்டிருக்கிறார்களே தவிர, உண்மையாக மக்களுக்கு பள்ளிகளுக்கு, கோவில்களுக்கு இடையூறாக இருக்கக்கூடிய மதுபான கடைகளை அவர்கள் மூடவில்லை, என்று தெரிவித்தார்.

  • 5 consitions to aamir khan in the release of sitaare zameen par movie படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?