பிரதமர் மோடியால் அரசமைப்பு சட்டத்திற்கு மிகப்பெரும் ஆபத்து… நாசக்கார சக்திகளின் கைகளில் சிக்கிய இந்தியா ; திருமாவளவன் ஆவேசம்..!!

Author: Babu Lakshmanan
24 June 2023, 1:36 pm
Quick Share

பிரதமர் மோடியால் அரசமைப்பு சட்டத்திற்கு மிகப்பெரும் ஆபத்து என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேடையில் அவர் பேசியதாவது :- மணிப்பூரில் மக்கள் சுதந்திரமாக இருந்தனர். எந்த கடவுளை வணங்க வேண்டும் என்பது தனி மனித சுதந்திரம். ஆனால் மதவாதிகள் ஒரு ஆபத்தான கட்டமைப்பை உருவாக்கி மோதலை தூண்டுகிறார்கள். இது தான் இன்றைக்கு மணிப்பூர் வன்முறையால் பற்றி எரிய காரணம். தலித்துகளை போல பழங்குடி இன மக்களிடையே தீண்டாமை என்பது இல்லை. அவர்களுக்குள் மதம் இருந்தது. அந்த மதத்தை வைத்து பகை மூண்டு மோதல் உருவெடுத்துள்ளது.

மணிப்பூர் பற்றி எரிகிறது, மோடி அமெரிக்காவில் இருக்கிறார். மோடியிடம் சிறுபான்மையினர் பற்றி கேள்வி எழுப்பியதற்கு பதில் சொல்லாமல் நகர்ந்து செல்கிறார். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 75 பேர் சேர்ந்து மோடியிடம் இது ஒரு சிறுபான்மை குறித்த கேள்வி எழுப்ப கடிதம் எழுதுகின்றனர். அமெரிக்காவில் இருக்கும் பத்திரிகையாளர்களுக்கு தெரிகிறது, இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக ஆட்சி நடைபெறுகிறது என்று.

இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்பொழுது, நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதைப் பற்றி கேள்வி எழுப்புகின்றனர். விஜய் அரசியலுக்கு வரட்டும் வாழ்த்துகிறோம். சிறுபான்மையினர் நலன் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது பற்றி மோடியிடம் கேள்வி எழுப்ப இந்திய ஊடகவியலாளர்கள் துணிச்சல் பெற வேண்டும். இந்தியாவிலேயே மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்பாட்டம் நடத்திய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தான்.

அரசியலமைப்பு சட்டத்திற்கு நேர் எதிரானவர்கள் இந்தியாவின் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாம் பாஜகவிற்கு வெறும் தேர்தல் எதிரிகள் தான். உண்மையாக அவர்களின் கொள்கை எதிரி விசிக தான். சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் இவை பாஜகவினருக்கு பிடிக்காது.

உலகிலேயே எந்த அரசமைப்பு சட்டத்திலும் இடம்பெறாத சொல் இந்திய அரசமைப்பு சட்டத்தில் இடம் பெற்றுள்ளது. அதுதான் மதசார்பின்மை. மதசார்பின்மை என்னும் வார்த்தை தான் பாஜகவினரை உருத்துகிறது. உலகில் எல்லா மதத்திலும் சகோதரத்துவம் இருக்கிறது. இந்து மதத்தில் சகோதரத்துவம் இருக்கிறதா? ஆர்எஸ்எஸ் அமைப்பு பார்ப்பனர்களால் பார்ப்பனர்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது.

சாதி ஒழிப்பை பற்றி பேசும் கட்சி விடுதலை சிறுத்தைகள். சாதியவாதிகள் நம்மை சாதி கட்சி என்று பேசுகிறான். நாடு இன்று நாசக்கார சக்திகளின் கைகளில் சிக்கி இருக்கிறது. மோடி பிரதமராக பொறுப்பேற்ற உடனே இந்த நாட்டிற்கு ஆபத்து என்று சொன்ன கட்சி விடுதலை சிறுத்தைகள். 24 மணி நேரமும் சனாதனத்தை எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் கட்சி விடுதலை சிறுத்தைகள். சனாதன சக்திகளை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைக்க வேண்டும், எனக் கூறினார்.

Views: - 267

1

0