மதுரை உயர்நீதிமன்ற கிளை கருணாநிதி போட்ட பிச்சை… அமைச்சர் எ.வ. வேலு சர்ச்சை பேச்சு..!!

Author: Babu Lakshmanan
5 July 2023, 10:11 am

திராவிடத்தையும் ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது என்றும், காவி அணிந்து நல்லது செய்தால் அவர்களும் எங்களுக்கு நண்பர்களே என அமைச்சர் எ.வ.வேலு பேசியுள்ளார்.

மதுரை அண்ணாநகரில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ தளபதி, மேயர் இந்திராணி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

விழா மேடையில் தளபதி பேசிய பின்னர், அமைச்சர் பி.டி.ஆர். பேசுவதாக இருந்த நிலையில், நேர நெருக்கடி காரணமாக தான் பேசுவதாக கூறி அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது :- முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி செயல்பட்டார். தனியார் பேருந்துகளை அரசுடைமையாக்கி எங்கள் பேருந்து என மக்கள் அழைக்க காரணமாக இருந்தவர். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக குடிநீர் நல வாரியம் அமைத்துத் தந்தவர். கோவில் கருவறைக்குள் நம்மவர்களை நுழைய அனுமதிக்கவில்லை என்பதால், அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தார்.

ஆன்மீகத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி நமது ஆட்சி. நம்மை ஆன்மீகத்திற்கு எதிரானவர்களாக காண்பிக்க எதிர்கட்சியினர் முயல்கின்றனர். ஆனால் அது நடக்காது. திராவிடத்தையும், ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது. திராவிடத்திற்குள் தான் ஆன்மீகம் இருக்கிறது. நாங்கள் ஆன்மீகத்திற்கு எதிரானவர்கள் அல்ல. காவி அணிந்தவர்கள் எல்லோரும் எங்கள் விரோதி அல்ல. காவி அணிந்து நல்லது செய்தால் அவர்கள் எங்கள் நண்பர்கள்.

தென்மாவட்ட மக்கள் வழக்கு நடத்துவதற்கு அதிக பொருள் செலவு செய்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரவேண்டிய தேவை இருந்தது. மத்திய அரசிடம் போராடி மதுரைக்கு உயர்நீதிமன்ற கிளையை கொண்டு வந்தது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போட்ட பிச்சை.

மதிய உணவு திட்டத்தை காமராஜர் துவங்கி, எம்.ஜி.ஆர், கலைஞர் வரை அனைவரும் பல்வேறு விதங்களில் முன்னேற்றி இருந்தாலும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இது பல்வேறு விதங்களில் குழந்தைகளுக்கு பயன்படுகின்றது. இப்படி மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து நடத்தும் ஆட்சி தான் கலைஞர் ஆட்சி. மதுரைக்கு எய்ம்ஸ் வருகிறதோ இல்லையோ என்ற நிலையில், சென்னையில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை திறந்தவர் ஸ்டாலின், என்றார்.

  • no use of thug life movie release in karnataka said by famous producer கர்நாடகாவில் தக் லைஃப் வெளியீடு? ஒரு பயனும் இல்லை- பேட்டியில் வாய்விட்ட பிரபல தயாரிப்பாளர்!