எளிய மக்கள் என்றால் எளக்காரமா…? சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சீல் வைக்க தைரியம் இருக்கா..? தமிழக அரசுக்கு சீமான் கேள்வி..!!

Author: Babu Lakshmanan
5 July 2023, 9:28 am
Quick Share

எளிய மக்கள் வழிபடும் கோவில் என்பதால் திரௌபதி அம்மன் கோவிலை பூட்டினார்கள் என்றும், பிரச்சனை முடியும் வரை சிதம்பரம் நடராஜர் கோவிலை பூட்ட முடியுமா…? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பொது சிவில் சட்டம் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- விடுதலை பற்றி இத்தனை ஆண்டுகளில் இதுவரை இந்த சட்டம் நடைமுறையில் இல்லை. இதுவரை இருப்பதில் என்ன பிரச்சனை உள்ளது. குறிப்பாக இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு உரிய சட்ட முறையை தகர்க்க வேண்டும். புது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றால் ராணுவத்திற்கு சேரும்போது நான் தாடியை எடுத்துக்கொண்டு சேர்வேன். சீக்கியர்களை தலப்பாவையும் தாடியும் எடுத்து வர சொல்ல முடியுமா…?

இதெல்லாம் திசை திருப்பும் முயற்சிகள், விலைவாசி உயர்ந்துள்ளது, கல்வி, மருத்துவம், போக்குவரத்து எதிலும் அடிப்படை கட்டமைப்பு இல்லை. ஆட்சிக்கு வந்தால் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்று சொல்கிறார்கள், அப்ப அவர்கள் வேலையில்லாமல் இருப்பதை அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். பத்தாண்டுகளில் எத்தனை கோடி பேருக்கு வேலை கொடுத்துள்ளார்கள். விலைவாசி ஏறியது குறித்து நிதி அமைச்சரிடம் கேட்டால் ராமர் கோயில் கட்டியவுடன் குறைந்து விடும் என்கிறார்.

சாதாரண மனநிலையில் தான் பேசுகிறார்களா என்று தெரியவில்லை. இந்த சட்டத்தைக் கொண்டு வந்தால் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மேலோங்கி விடுமா, நாடு வளர்ந்து விடுமா..? பெண்களுக்கு சம உரிமை உள்ளதா..? நாட்டின் முதல் குடிமகன் ராம்நாத் கோவிந்த் மரத்தடியில் அமர்ந்து யாகம் வளர்த்தார், நாட்டின் முதல் குடிமகள் திரௌபதி முர்முவை கட்டையை போட்டு வெளியே நிறுத்தி உள்ளார்கள். சட்டத்திற்கு முன்பு சமம் இல்லை என்கிறபோது எதற்கு இந்த சட்டம்.

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தீர்ப்பு குறித்த கேள்விக்கு:- இன்னொரு நீதிபதி இருந்திருந்தால் வேறு ஒரு தீர்ப்பு வந்திருக்கும். இரண்டு பேர் அமர்வு என்பதால் இரண்டு தீர்ப்பு வந்துள்ளது. ஒரு வழக்கை எடுத்துக் கொண்டால் கீழமை நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு, உயர்நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வரும் இதை பார்த்தால் குழம்பி விடுவோம். சட்டம் சமம் என்பதே இல்லை. ஒரு நாட்டில் ஒரு வழக்குக்கு ஒரு தீர்ப்பு தான் இருக்க வேண்டும், என்றார்.

சென்னையில் மூன்று வயது குழந்தையின் கை சிகிச்சையில் பறிபோனது குறித்த கேள்வி:- அது ஒரு பெறுந்துயரம். இந்த விவகாரம் வெளியில் தெரிந்து விட்டது, ஆனால் பல குழந்தைகள் விவகாரம் சத்தம் இல்லாமல் மறைந்துள்ளது. அரசு பதில் சொல்லாமல் கவனத்தில் கொள்ள வேண்டும். தவறான சிகிச்சை என்று ஒத்துக் கொண்டு, இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொண்டு, பொதுவெளியில் வருந்த வேண்டும். பின்னர் அந்த குழந்தையின் எதிர்காலத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும். இரண்டு கையுடன் வந்த குழந்தையை மாற்றுத்திறனாளியாக மாற்றி தாயிடம் கொடுத்துள்ளார்கள். இதற்கு அரசு கூறும் பதில் பொறுப்பானதாக, ஏற்புடையதாக இல்லை.

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் விவகாரம் குறித்த கேள்விக்கு:- என் இறைவனுக்கு முன்பாக, என் கோவிலுக்கு முன்பாக ஆக்கிரமித்துக் கொண்டு என் தாய் மொழியில் வழிபட விடாமல் செய்கிறார்கள். திரௌபதி அம்மன் கோவிலில் பூட்டை போட்டவர்கள், இதற்கு பூட்டு போட முடியவில்லை. பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று நினைக்கவில்லை. இதை ஒரு கொடுமையாக நான் பார்க்கிறேன், தமிழினத்தின் இயலாமையை காட்டுகிறது. அதிகாரத்தினுடைய வலிமையற்ற தன்மையை காட்டுகிறது. எளிய மக்கள் வழிபடும் கோவில் என்பதால் திரௌபதி அம்மன் கோவிலை பூட்டினார்கள், பிரச்சனை முடியும் வரை இந்த கோவிலை பூட்ட முடியுமா…?, எனக் கேள்வி எழுப்பினார்.

ஆதிதிராவிடர் பேரவை நாம் தமிழர் போராட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மனு கொடுத்தது குறித்த கேள்வி:- ஆதித்தமிழன் ஆன நான் திராவிடன் ஆகி விடுவேன். அவர்கள் தமிழர் ஆகிவிடுவார்களா..? எத்தனை காலத்திற்கு ஏமாற்றுவார்கள். அந்தக் காலமெல்லாம் மலையேறிவிட்டது, இந்த தலைமுறை விழித்துக் கொண்டு விட்டது, இனி விலகி விட வேண்டும், என்றார்.

Views: - 437

0

0