PM மோடிக்கு தெரிந்த EPS-ன் அருமை.. அண்ணாமலைக்கு தெரியாம போயிடுச்சு… செல்லூர் ராஜு வேதனை…!!

Author: Babu Lakshmanan
3 August 2023, 3:44 pm

அதிமுக என்ற கோவிலுக்குள் இருக்கும் வரைதான் யாருக்கும் மரியாதை என்றும், கோவிலை விட்டு வெளியேறினால் மிதித்து விட்டு சென்று விடுவோம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை நேதாஜி சாலையில் அமைந்துள்ள ஜான்சிராணி பூங்கா அருகில் கை ரிக்சா வண்டிகளில் அதிமுக எழுச்சி மாநாடு விளம்பரப் பதாகையை பொருத்தி, தொழிலாளர்களுக்கு வேட்டி சட்டை வழங்கி எழுச்சி மாநாட்டிற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அழைப்பு விடுத்தார். தொடர்ந்து தொண்டரின் ரிக்சா ஒன்றில் ஏறி சிறிது தூரம் ஓட்டி சென்றார்.

பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- அதிமுக என்கிற கோவிலுக்குள் இருக்கும் வரை கல்லாக இருந்தாலும் மதிப்போம். கோவிலை விட்டு வெளியே சென்றால் அவர்களை மிதித்து விட்டு சென்று விடுவோம். ஓ.பி.எஸ்., குறித்து நான் விமர்சித்த அந்த வார்த்தைகள் நான் சொன்னது அல்ல, இதற்கு முன்னால் பலரும் கட்சியை விட்டு வெளியேறிய போது ஜெயலலிதா குறிப்பிட்டது.

கொடநாடு வழக்கை தீவிரமாக விசாரித்தவரர் எடப்பாடி பழனிச்சாமி தான். அந்த வழக்கில் ஈடுபட்டது திமுகவினர் தான் என்பது அப்போதே தெரியவந்தது. துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த போதே கொடநாடு வழக்கு விசாரணை குறித்து அவருக்கு நன்றாக தெரிந்திருந்தும், இப்போது போராட்டம் நடத்துகிறார் என்றால் அவரது நோக்கம் என்ன என கேள்வி எழுகிறது.

எங்களை பொறுத்தவரையில் அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவர், “Just like” அவ்வளவு தான். எங்களுக்கு மோடி ஜி, அமித்ஷா ஜி, நட்டா ஜி தான் முக்கியம். கூட்டணி கட்சியினர் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியை அழைத்து பக்கத்தில் அமர வைத்த மோடிக்கு தெரிந்த எடப்பாடி பழனிசாமியின் அருமை அண்ணாமலைக்கு தெரியவில்லை.

காவல்துறையினர் ஸ்பாட் பைன் என்ற பெயரில் மக்களை துன்பத்துக்கு உள்ளாக்கி வருகின்றனர். திமுக ஆட்சியில் விலை வாசி உள்ளிட்ட எல்லாமே வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது, என்று கூறினார்.

  • 5 consitions to aamir khan in the release of sitaare zameen par movie படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?