ஓபிஎஸ்-க்காக இத்துணை முனைப்பு காட்டுவது ஏன்..? இருக்கை விவகாரத்தை எழுப்பி அதிமுக அமளி ; சபாநாயகர் போட்ட திடீர் உத்தரவு..!!

Author: Babu Lakshmanan
11 October 2023, 1:56 pm

துறைரீதியான கேள்விக்கு அமைச்சர் பதிலளிப்பதில்லை என்றும், சபாநாயகர் தான் பதிலளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியதும் அதிமுக எதிர்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அவர் பேசியதாவது:- எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக, 10 முறை கடிதம் அளித்துள்ளோம். 3 சட்டமன்ற உறுப்பினர்களை நீக்க சொன்னதையும் நீங்கள் செய்யவில்லை

அதிமுகவில் இருந்து ஓ.பி.எஸ். நீக்கப்பட்டுள்ளார். எடப்பாடி தலைமையிலான அணியே அதிமுக என அனைத்து இடங்களிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்கட்சி துணைத்தலைவராக உதயகுமாரை அதிமுக நியமித்துள்ளது. ஆனால், அதற்கான இருக்கையை ஏன் சபாநாயகஎ தர மறுக்கிறார்? எதிர்கட்சியான அதிமுகவில் இல்லாத ஒருவருக்கு , எதிர்கட்சி துணைத் தலைவராக இல்லாதவருக்கு ஏன் இருக்கையை கொடுக்க இத்துணை முனைப்பு?, எனக் கேள்வி எழுப்பினார்.

இதனிடையே, இபிஎஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, “நீங்கள் கொடுத்ததை மறுக்கவில்லை, இருக்கை விவகாரம் தொடர்பாக வீம்புகாக நடக்கவில்லை, சட்டப்படி நடக்கிறேன். சட்டமன்றத்திற்குள் இருக்கை குறித்து கேள்வி எழுப்ப உரிமை இல்லை,” எனக் கூறினார்.

சபாநாயகரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, எதிர்க்கட்சியினரை வெளியே அனுப்பும்படி சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, அவையில் இருந்து அதிமுகவினர் வெளியேறிய நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில், “எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக, பல முறை பேரவை தலைவரிடம் கடிதம் அளித்தும், அதற்கு தீர்வு காணப்படவில்லை; அவை மரபை சபாநாயகர் கடைபிடிக்கவில்லை.

துறைரீதியான கேள்விக்கு அமைச்சர் பதிலளிப்பதில்லை, சபாநாயகர் தான் பதிலளிக்கிறார்; நீக்கப்பட்ட 3 பேரையும் எந்த கட்சியும் சாராதவர் என அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணமே திமுகவிற்கு இல்லை,” என தெரிவித்துள்ளார்.

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…