யார் தப்பு பண்றாங்க-னு ஒவ்வொருத்தரா பார்த்துட்டு இருக்க முடியாது… ஜாபர் சாதிக் குறித்து அமைச்சர் ரகுபதி கருத்து..!!

Author: Babu Lakshmanan
2 March 2024, 2:47 pm

2 கோடி உறுப்பினர்கள் உள்ள திமுகவில் அனைவரையும் கண்காணிக்க முடியாது என்று புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் விழா புதுக்கோட்டை ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் நடைபெற்றது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு நேற்று பிறந்த குழந்தைகளுக்கு மோதிரங்களை அணிவித்தார்.

இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, பாஜக பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை தெரிந்தே கட்சியில் சேர்க்கிறது. ஆனால், 2 கோடி உறுப்பினர்கள் உள்ள திமுகவில் அனைவரையும் பூதக்கண்ணாடி வைத்து கண்காணிக்க முடியாது. அதே வேளையில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் எங்களுக்கு தெரிந்தால் அவர்களை சேர்க்க மாட்டோம், அனுமதிக்க மாட்டோம்.

திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். பாஜக எதை வேண்டுமானாலும், சொல்லலாம், நடப்பதை தான் பார்க்க வேண்டும். பாஜக முதலில் 3 சதவீதத்தை தாண்டட்டும், அப்புறம் 30 சதவீதத்திற்கு போகலாம். ஆயிரம் கைகள் மறைத்திருந்தாலும் தமிழகத்தில் உதயசூரியனை யாரும் மறக்க முடியாது.

அதிமுக எம்பிக்கள் காணாமல் போனதை தற்போது தேடி கொண்டுள்ளனர். எங்கள் எம்பிக்கள் மக்களோடு தான் இருக்கின்றனர். எங்கள் எம்பிக்களை எங்க வேண்டுமானாலும் பார்க்கலாம். அதனால் அவர்கள் எம்பிக்கள் காணாமல் போனதை தற்போது சீட்டு கொடுப்பதற்காக தேடிக் கொண்டுள்ளனர். சாந்தன் இறந்த நிலையில் சிறப்பு முகாமில் உள்ள மற்றவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை நாங்களும் வலியுறுத்துகிறோம்.

மிகப் பெரிய வெற்றியை சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் பெற்றவர் உதயநிதி ஸ்டாலின். அவரோட உழைப்பால் தான் சட்டமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனை அண்ணாமலை போன்றவர்கள் மூடி மறைக்க நினைத்தாலும், உதாசீனப்படுத்தினாலும் ,தமிழக மக்களின் இதயங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு தனி இடம் உண்டு, எனக் கூறினார்.

  • actress madhoo talked about forced kiss scene while she was acting as a heroine வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!