’வள்ளுவரை ஆரிய அடிமை என்றார் பெரியார்’.. மீண்டும் சீமான் பரபரப்பு பேச்சு!

Author: Hariharasudhan
29 January 2025, 9:59 am

திராவிடச் சித்தாந்தம் என்ற பேராபத்திற்கு எதிரான அரசியலை முன்னெடுத்துள்ளேன் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து, பவானி சாலையில் நேற்று இரவு பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய சீமான், “திமுகவை அகற்றாமல் தமிழகத்திற்கு விடிவில்லை. தமிழகத்திற்கு நல்லாட்சியும் கிடைக்காது. திராவிடம் தளர்ச்சி அடையும்போது தமிழ்த் தேசியம் எழுச்சி பெறுகிறது. திராவிடத்தின் குறியீடாக உள்ள பெரியாா் ஈவெராவை எதிர்க்க தமிழ் தேசியத்தின் அடையாளமாக உள்ள பிரபாகரன் பின்னால் நாங்கள் நிற்கிறோம்.

பெரியார் ஈவெராவை எதிர்ப்பது என்பது மதவாத சக்திகளுக்கு உதவியாகப் போய்விடும் என்ச் சொல்கின்றனர். ஆனால், தொல்காப்பியன், திருவள்ளுவர், கம்பரை ஆரிய அடிமை என பெரியார் ஈவெரா கூறுகிறார். பெரியார் ஈவெராவையும், திராவிடத்தையும் எதிர்த்தால், உடனே பாஜகவின் கைக்கூலி எனச் சொல்லிவிடுகின்றனர்.

Seeman about Thiruvalluvar

எந்த வகையில் அநீதி நடந்தாலும், அதனை எதிா்க்கும் தமிழனின் மரபணு என்னிடம் உள்ளது. தமிழகத்திற்கு பேராபத்தான அரசியலை நான் முன்னெடுப்பதாக திருமாவளவன் கூறியுள்ளார். நான் திராவிடச் சித்தாந்தம் என்ற பேராபத்திற்கு எதிரான அரசியலை முன்னெடுத்துள்ளேன்” எனப் பேசினார்.

இதையும் படிங்க: வலதுசாரி அரசியல் நாடகம்.. சீமான் பாஜகவின் கொ.ப.செ? – திருமாவளவன் கேள்வி!

மேலும், இந்தக் கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியினர் மாலை 05.30 முதல் 06.30 மணி வரை அனுமதி கேட்டுள்ளனர். இதற்கான அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், மாலை 06.30 மணிக்கு தொடங்கிய பரப்புரை, இரவு 09.15 மணிக்கே நிறைவடைந்துள்ளது. இதனால் தேர்தல் விதிகளை மீறி அனுமதி வழங்கிய நேரத்தை விட கூடுதல் நேரம் பரபரப்பு மேற்கொண்டதாக, பறக்கும்படை அதிகாரி நவீன், கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சீமான் உள்பட ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்