பெட்ரோல், டீசல் விலைய கேட்டா தலைசுத்திறும்…137 நாட்களுக்கு பின் விலை உயர்வு: ரூ.1000ஐ நெருங்கும் சமையல் கேஸ்…வேதனையில் மக்கள்..!!

Author: Rajesh
22 March 2022, 8:42 am
Quick Share

சென்னை: 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல், மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் உள்ளிட்டவை விலை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. 137-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை நாடுமுழுவதும் கணிசமாக குறைந்தது.

இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் முதல் சென்னையில் பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், 137வது நாளாக சென்னையில் நேற்று வரை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வந்தது.

இந்நிலையில் பொதுமக்களுக்கு பேரிடியாக இன்றைய தினம் சென்னையில் பெட்ரோல் டீசல் , வீட்டு உபயோக சிலிண்டர் உயர்ந்துள்ளது. சென்னையில் சுமார் நான்கரை மாதங்களுக்கு பிறகு பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனத்திற்கு 76 காசுகள் உயர்த்தியுள்ளன.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 76 காசுகள் உயர்ந்து ரூ 102.16 க்கு விற்பனையாகிறது. அது போல் சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை 76 காசுகள் உயர்ந்து ரூ 92.19க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயருமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் ரூ 50 உயர்ந்து ரூ 967.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 1808

0

0