வடிவேலு பற்றி No.. சிங்கமுத்துக்கு கிடுக்கிப்பிடி போட்ட கோர்ட்!
Author: Hariharasudhan6 December 2024, 2:20 pm
சிங்கமுத்து, வடிவேலு குறித்து எந்த அவதூறு கருத்தும் தெரிவிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
சென்னை: தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சிங்கமுத்து, யூடியூப் சேனல்களில் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசியதாகக் கூறி 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், “பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு நடிகர் சிங்கமுத்து பேட்டி அளித்து உள்ளார்.
அந்தப் பேட்டிகளில் என்னைப் பற்றி துளி கூட உண்மையில்லாத, பல பொய்களைக் கூறி, என்னைத் தரக்குறைவாகவும் பேசி உள்ளார். எனவே, சிங்கமுத்து 5 கோடி ரூபாயை எனக்கு நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும். அதுமட்டுமல்லாமல், என்னைப் பற்றி அவதூறு பரப்ப சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிங்கமுத்து தரப்பில், தான் அவதூறாகப் பேசியதாக மட்டுமே வடிவேலு கூறியிருக்கிறாரே தவிர, எந்த மாதிரி அவதூறு என்று குறிப்பிடவில்லை என்றும், தான் திரைத்துறை சார்ந்த கருத்து மட்டுமே தெரிவித்ததாகவும் வாதிடப்பட்டது.
இதையும் படிங்க: கோர்ட் படியேறும் திரிஷா… சூர்யா படப்பிடிப்பில் என்ன நடந்தது?
இந்த நிலையில், மீண்டும் இந்த வழக்கு இன்று (டிச.06) விசாரணைக்கு வந்தது. அப்போது வடிவேலு தரப்பில், “இந்த வழக்கை தாங்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது. ஆனால், அதன் பிறகும் கூட யூடியூபில் சிங்கமுத்து தரப்பில் தங்களைப் பற்றி தொடர்ந்து அவதூறாகப் பேசி வருகிறார்கள்” எனக் கூறப்பட்டது.
இதனையடுத்து சிங்கமுத்து தரப்பில், “அப்படி எந்த பேட்டியும் கொடுக்கவில்லை. தங்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால், இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்” என்றும் வாதிடப்பட்டது.
இவ்வாறு இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை வருகிற டிசம்பர் 14ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும், அதுவரை சிங்கமுத்து, வடிவேலு குறித்து எந்த அவதூறு கருத்தும் தெரிவிக்கக் கூடாது என்றும், ஏற்கனவே சிங்கமுத்து கூறியது யூடியூபில் இருப்பதால் அதனை நீக்க அந்தந்தச் சேனலுக்கு கடிதம் அனுப்புமாறும் உத்தரவிட்டார்.