பூமாதா, கோமாதா… படத்தில் பேசிய வசனத்தால் ட்ரோலுக்குள்ளாகும் தமன்னா…
Author: Prasad9 April 2025, 1:08 pm
தமன்னாவின் புதிய திரைப்படம்…
2022 ஆம் ஆண்டு தெலுங்கில் “ஓடெலா ரயில்வே ஸ்டேஷன்” என்று ஒரு திரைப்படம் வெளிவந்தது. இதில் ஹேபா படேல், சாய் ரோனக் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை அஷோக் தேஜா என்பவர் இயக்கியிருந்தார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “ஓகெலா 2” திரைப்படம் வருகிற 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.

முதலாம் பாகத்தை இயக்கிய அஷோக் தேஜா இத்திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இதில் தமன்னா முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் டிரெயிலர் தற்போது வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்தில் தமன்னா சிவ சக்தி என்ற பெண் சாமியார் வேடத்தில் நடித்துள்ளதாக தெரிய வருகிறது.
டிரோலுக்குள்ளான தமன்னா…
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் டிரெயிலரில் தமன்னா பேசிய ஒரு வசனம் இணையவாசிகளால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. “நாம் நிற்பதற்கு தேவை பூமாதா. நாம வாழ்றதுக்கு தேவை கோமாதா. நீங்க வாழ மாட்டை கொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதனுடைய கோமியத்தை விற்று கூட பிழைச்சிக்க முடியும்” என்று தமன்னா பேசும் ஒரு வசனம் இத்திரைப்படத்தின் டிரெயிலரில் இடம்பெற்றுள்ளது. இணையத்தில் பலரும் இந்த வசனத்தை ட்ரோல் செய்து வருகின்றனர்.

தமன்னா “ஓடெலா 2” திரைப்படத்தை தொடர்ந்து “ரெய்டு 2” என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியில் “ரேஞ்சர்” என்ற திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். இவர் தமிழில் கடைசியாக “அரண்மனை 4” திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.