மே.வங்கத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம்.. பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்.. சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்கு..!!

Author: Babu Lakshmanan
25 March 2022, 12:02 pm
Quick Share

கொல்கத்தா : மேற்குவங்கத்தில் 8 பேர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிர்பூம் மாவட்டத்தில் உள்ள பர்ஷல் கிராம பஞ்சாயத்தின் துணைத் தலைவராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பாதுஷேக் என்பவர் இருந்து வந்தார். இவர் கடந்த 23ம் தேதி கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, அன்று மாலையே பர்ஷல் கிராமத்துக்கு அருகே உள்ள போக்டுய் என்னும் கிராமத்திற்கு சில மர்ம கும்பல் வந்தது. அவர்கள், அந்த கிராமத்தில் இருந்த வீடுகளுக்கு தீ வைத்தது. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தீயில் கருகி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியது. அதில், உயிரிழந்த 8 பேரும், முன்னதாக கடுமையாக தாக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்தது.

இந்நிலையில், 8 பேர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ.,க்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Views: - 817

0

0