அரசுப்பேருந்து ஓட்டுநரை அறைந்த பள்ளி மாணவன்… படியில் தொங்கியதை போலீசில் புகார் அளித்ததால் ஆத்திரம்.. சென்னையில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
25 March 2022, 10:47 am
Quick Share

சென்னை : சென்னையில் அரசுப் பேருந்து ஓட்டுரை பள்ளி மாணவன் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில நாட்களாக பேருந்துகளில் பயணிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிகட்டில் தொங்குவதை சாகசமாக நினைத்து வருகின்றனர். இதன் விபரீதத்தை உணராத அவர்கள், அதனைக் கண்டிப்பவர்களை ஏளனப்படுத்துவதும், அவமானப்படுத்துவம் கூட நடந்து வருகிறது.

அந்த வகையில், சென்னையில் பள்ளி மாணவன் ஒருவன் அத்துமீறி செய்த செயல் அரசுப் போக்குவரத்து ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயிலை சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் காளிதாஸ் என்பவர், கொட்டூரில் இருந்து பிராட்வே செல்லும் மாநகர அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, சில தனியார் பள்ளி மாணவர்கள் படிகட்டில் தொங்கியபடியும், பேருந்தின் மேல் ஏறியும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் காளிதாஸ் போக்குவரத்து போலீசாரிடம் முறையிட்டுள்ளார்.

அதன்பேரில், அட்டகாசம் செய்த பள்ளி மாணவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பின்னர், அதே பேருந்து பெரம்பூர் பேரக்ஸ் வழியாக வந்து கொண்டிருந்த போது, 4 மாணவர்கள் பேருந்தில் ஓடி வந்து ஏறினர். அப்போது, தினேஷ்(19) என்ற மாணவன், போலீஸில் புகார் அளித்த ஓட்டுநர் காளிதாஸின் கன்னத்தில் இரு முறை அறைந்ததாக கூறப்படுகிறது.

இதனால், ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதும், 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இது தொடர்பான விசாரணை மேற்கொண்ட கீழ்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன், மாணவர் தினேஷை கைது செய்தார். மேலும் அட்டகாசத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் வழக்கறிஞர்களின் மகன் உட்பட 3 சிறுவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Views: - 712

0

0