அரசு பேருந்தில் பயணிக்க மக்கள் அச்சம்.. இருக்கையுடன் நடத்துநர் தூக்கி வீசப்பட்ட சம்பவம்.. திமுக அரசு மீது EPS சாடல்!

Author: Udayachandran RadhaKrishnan
25 April 2024, 7:14 pm
EPS
Quick Share

அரசு பேருந்தில் பயணிக்க மக்கள் அச்சம்.. இருக்கையுடன் நடத்துநர் தூக்கி வீசப்பட்ட சம்பவம்.. திமுக அரசு மீது EPS சாடல்!

திருச்சியில் நேற்று அரசு பேருந்து ஒன்று வளைவில் திரும்பும் போது, இருக்கையுடன் நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நடத்துநர் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பழுதான பேருந்துகளால் பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் திமுக அரசு விமர்சித்தனர்.

இந்த நிலையில், தமிழக அரசை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தனது X தளப்பதிவில், நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துனர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: நம்ம ஊருல இருந்து சீனாவுக்கு பஸ் போகுதா? அதிர வைத்த அரசு பேருந்து : திண்டுக்கல் மக்கள் SHOCK!!

ஏற்கனவே ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த விடியா திமுக அரசை வலியுறுத்தியிருந்தேன்.

ஆனால் மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்த விடியா திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Views: - 117

0

0