காதலனுடன் லிவ் இன் வாழ்ந்த விமானப் பணிப்பெண்… 4வது மாடியில் இருந்து விழுந்து பலி : நள்ளிரவில் நடந்த சம்பவம்… காதலன் கைது!!

Author: Babu Lakshmanan
14 March 2023, 9:03 am
Quick Share

கர்நாடகாவில் காதலனுடன் சண்டையிட்ட நிலையில், நள்ளிரவில் விமானப் பணிப்பெண் 4வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் காதலன் மீது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

இமாச்சலபிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் அர்ச்சனா திமென் (28) சர்வதேச விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார். இதனிடையே, ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் கேரளாவை சேர்ந்த ஆதேஷ் என்ற இளைஞருடன் அர்ச்சனாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சாப்ட்வேர் இன்ஜினியரான ஆதேஷ் கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

டேட்டிங் ஆப் மூலம் பழக்கம் ஏற்பட்டாலும் அவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து, இருவரும் சில மாதங்களாக திருமணம் செய்யாமல் கணவன், மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே, அவ்வப்போது இருவருக்கும் இடையே சிறுசிறு சண்டைகளும், பிரச்சனைகளும் எழுந்து வந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் துபாயில் இருந்து பெங்களூரு வந்த அர்ச்சனா, காதலன் ஆதேஷூடன் பெங்களூருவின் கோரமங்கலாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தியேட்டருக்கு சென்று படம் பார்த்து விட்டு, மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது, இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், இரவு 12 மணியளவில் அர்ச்சனா, அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போது, அர்ச்சனா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், அர்ச்சனாவின் லிவ் இன் காதலன் ஆதேஷை கைது செய்தனர்.

அர்ச்சனா 4வது மாடியில் இருந்து கீழே குதித்தாரா? அல்லது அர்ச்சனாவை ஆதேஷ் கீழே தள்ளி கொலை செய்தாரா? என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Views: - 324

0

0