நடத்தையில் சந்தேகம்… பட்டப்பகலில் மனைவியை கொடூரமாக வெட்டிக் கொன்ற கணவன் ; வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..!!

Author: Babu Lakshmanan
5 March 2024, 4:43 pm
Quick Share

மனைவி நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவன் மனைவியை பட்டப் பகலில் பலர் கண் முன் கொடூரமாக அறிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அவுகு பட்டணத்தில் வசிக்கும் ரங்கசாமி என்பவர், முதல் மனைவியை விட்டு பிரிந்து, 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓபுலாம் பள்ளி கிராமத்தை சேர்ந்த குமாரி (37) என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கடந்த சில நாட்களாக மனைவி குமாரி நடத்தையில் சந்தேகம் அடைந்த ரங்கசாமி மனைவியை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்தார்.

இந்நிலையில், குமாரி தனது சித்தியுடன் வீட்டிற்கு வெளியே பேசிக்கொண்டு இருந்த போது, கையில் அரிவாளுடன் அங்கு வந்த ரங்கசாமி, மனைவி குமாரியை சரமாரியாக வெட்டினார். தடுக்க முயன்ற குமாரின் சித்தி படுகாயம் அடைந்தார். அங்கிருந்த பொதுமக்கள், மனைவியை கணவன் வெட்டுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு, தங்கள் செல்போன் செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். ஆனால் யாரும் அவரை தடுக்க முன் வரவில்லை.

வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் பொதுமக்கள் வந்து தடுப்பார்கள் நாம் எப்படியாவது உயிர் பிழைக்கலாம் என்ற குமாரியின் ஆசை நிராசையாக போனது. இந்த நிலையில், அதே இடத்தில் குமாரி ரத்த வெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

அங்கு வந்த போலிசார் படுகாயம் அடைந்த குமாரியின் சித்தியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியில் பதுங்கி இருந்த ரங்கசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனால் கொடூரமாக வெட்டப்பட்டு மரணம் அடைந்த குமாரி உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Views: - 163

0

0