புதிய ஊதிய உயர்வு உத்தரவுக்கு எதிர்ப்பு : விஜயவாடாவில் மாபெரும் பேரணி

Author: kavin kumar
3 February 2022, 9:08 pm
Quick Share

ஆந்திர அரசு புதிதாக அறிவித்த அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான அரசாணையை திரும்ப பெறக்கோரி விஜயவாடாவில் மாபெரும் பேரணி நடைபெற்றது.

ஆந்திர மாநில அரசு தன்னுடைய ஊழியர்களுக்கு சமிபத்தில் 24 சதவீத ஊதிய உயர்வு வழங்கி முடிவு செய்தது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் அரசின் ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பு தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறி அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஊதிய உயர்வு அறிவித்த அரசு வீட்டு வாடகை படி உள்ளிட்ட பல்வேறு படிகளை குறைத்துள்ளது. எனவே ஊதிய உயர்வு தொடர்பான புதிய அரசாணையை ரத்து செய்து பழைய முறையிலேயே தங்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திர மாநில அரசு நேற்று புதிய அரசாணை அடிப்படையில் ஊழியர்களுக்கு ஊதியத்தை செலுத்தியது. எனவே வெகுண்டெழுந்த அரசு ஊழியர்கள் ஒன்றிணைத்து இன்று விஜயவாடாவில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர்.

அரசு ஊழியர்கள் விஜயவாடா செல்லாமல் தடுக்கும் வகையில் மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனாலும் ஊழியர்கள் போலீசார் விதித்த தடையை மீறி விஜயவாடாவில் திரண்டு இன்று மாபெரும் பேரணி நடத்தினர். அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பினர், அரசு ஊழியர்கள் சங்க கூட்டமைப்பினர் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் விஜயவாடாவில் திரண்டு அரசின் புதிய ஊதிய உயர்வு அரசாணைக்கு எதிராக நடத்திய மாபெரும் பேரணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Views: - 1039

0

0