4 நாட்களில் 3வது முறையாக முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் : ரூ.400 கோடி கேட்டு இமெயிலுக்கு வந்த மெசேஜ்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 October 2023, 12:00 pm
Ambani - Updatenews360
Quick Share

4 நாட்களில் 3வது முறையாக முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் : ரூ.400 கோடி கேட்டு இமெயிலுக்கு வந்த மெசேஜ்!!

இந்தியாவின் பெரும் பணக்காரர், தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானிக்கு ரூ.400 கோடி பணம் கேட்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. அதுவும், ஒரே மின்னஞ்சலில் இருந்து பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு 4 நாட்களில் 3வது கொலை மிரட்டல் வந்துள்ளது பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு, அக்டோபர் 27ம் தேதி முகேஷ் அம்பானி-க்கு ஈமெயில் மூலம் ரூ.20 கோடி கேட்டு கொலை மிரட்டல் வந்தது. இதைத்தொடர்ந்து, அக்டோபர் 28ம் தேதி 2வது ஈமெயில் 200 கோடி ரூபாய் கேட்டு அதே கொலை மிரட்டல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது பணத்தை உயர்த்தி மீண்டும் முகேஷ் அம்பானிக்கு மூன்றாவது முறையாக ரூ.400 கோடி பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

3 மிரட்டல்களும் ஒரே இமெயில் ஐடியில் இருந்து வந்துள்ளது என்றுள்ளனர். மேலும், முகேஷ் அம்பானி தொகையை செலுத்தாவிட்டால் சுட்டுக்கொல்லப்போவதாக முந்தைய மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டது.

அனைத்து மின்னஞ்சல்களும் ஒரே ஐடியிலிருந்து ஷதாப் கான் என அடையாளம் காணப்பட்ட நபரால் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த இமெயில் ஐடி பெல்ஜியம் நாட்டுக்கு டிரேஸ் செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மிரட்டலை தொடர்ந்து மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Views: - 282

0

1