முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேவுக்கு முழு ஆதரவு… எனக்கு எந்த பொறுப்பும் வேண்டாம் : தட்டிக்கொடுத்த தேவேந்திர பட்னவிஸ்!!

Author: Babu Lakshmanan
30 June 2022, 5:22 pm
Quick Share

மும்பை : மகாராஷ்டிராவின் முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்பார் என்று பாஜக தலைவர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசு ஆட்டம் கண்டு கொண்டிருந்தது. காரணம், ஆளும் சிவசேனா கட்சியின் முக்கிய தலைவரும், சீனியர் அமைச்சர்களில் ஒருவருமான ஏக்நாத் ஷிண்டே, முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரும்பியதுதான்.

உத்தவ் தாக்கரே மீதான செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு, தனி அணியை உருவாக்கினார். இது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. உத்தவ் தாக்கரே – ஏக்நாத் ஷிண்டே இடையிலான அரசியல் மோதல் முற்றிய நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் சிவசேனாவுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. இது மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இதனிடையே, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து சிவசேனா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றமும், மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதியளித்தது.

uddhav_thackeray_updatenews360

நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, நேற்று இரவே முதலமைச்சர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே விலகினார். இதனால், மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி கவிழ்ந்து, ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உருவானது.

இந்த நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்களுடன் மகாராஷ்டிரா பாஜக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பட்னவிஸ் ஆலோசனை நடத்தினர். பின்னர், ஏக்நாத் ஷிண்டேவுடன் ஆளுநர் பகத்சிங் கோசியாரியை சந்தித்த தேவேந்திர பட்னவிஸ், ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- 2019ல் மஹாராஷ்டிர மக்கள் பா.ஜ.,வின் ஆட்சியையே விரும்பினர். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை தேர்தலுக்கு பின் உத்தவ் தாக்கரே மீறினார். பால் தாக்கல் தாக்கரே கொள்கைகளுக்கு எதிராக உத்தவ் தாக்கரேவின் செயல்பாடுகள் இருந்தன. சிவசேனா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் செயல்பாடு ஹிந்துத்துவா, சாவர்க்கரை அவமதிப்பதாக இருந்தது.

2019ல் சிவசேனா எங்களுக்கு துரோகம் செய்தது. 2019ல் மக்களின் தீர்ப்பை அவமானப்படுத்தி விட்டு மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணி அமைக்கப்பட்டது. மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்பார். இவரின் பதவியேற்பு இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறும். அவருக்கு பா.ஜ.க, முழு ஆதரவு அளிக்கிறது. ஆட்சியில் எனக்கு எந்த பொறுப்பும் வேண்டாம், எனக் கூறி விட்டேன், எனக் கூறினார்.

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமையும் போது, முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் தான் முதலமைச்சராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதலமைச்சர் பதவி வழங்கியது திடீர் திருப்பமாக பார்க்கப்படுகிறது.

Views: - 533

1

0