‘முன்னறிவிப்பின்றி எல்லைப் பகுதிக்கு போகாதீங்க’: உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுரை..!!

Author: Rajesh
26 February 2022, 10:19 am

புதுடெல்லி: உக்ரைனில் உள்ள இந்தியர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி எல்லைப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

உக்ரைன் மீது நேற்று முன் தினம் ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைன் எல்லைக்குள் குண்டு மழை பொழிந்த ரஷ்ய படைகள், முக்கிய நகரங்களை நோக்கி வேகமாக முன்னேறிச் சென்றன. ஒரு பக்கம் ஏவுணை வீச்சும், மறுபக்கம் குண்டுமழையும் பொழிந்ததால் உக்ரைன் நாட்டின் பல நகரங்கள் முதல்நாள் போரிலேயே உருக்குலைந்தன.

தொடர்ந்து 3வது நாளாக உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் – ரஷ்யா போரால், உக்ரைனில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர்.

உக்ரைன் தனது வான்பகுதியை மூடிவிட்டதால், அங்கு மீட்பு விமானங்கள் செல்ல முடியாத நிலை நிலவுகிறது. இந்நிலையில், உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, போலந்து, சுலோவாகியா ஆகிய நாடுகளுடனான எல்லை பகுதியில் இந்திய தூதரகம் சோதனை முகாம்களை அமைத்துள்ளது. இதனிடையே, முன் அறிவிப்பு இன்றி எல்லைப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

தூதரக அதிகாரிகள், தூதரக அவசர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள வேண்டும் என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், உக்ரைனின் மேற்கு பகுதிகளில் உள்ள நகரங்களில் இருப்பது எல்லையை நோக்கி செல்வதை விட பாதுகாப்பானது. தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா 3வது நாளாக தாக்குதல் நடத்தும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் -வில்  இணையதள சேவை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கீவ் ராணுவத்தளத்தை ரஷ்யா கைப்பற்றும் முயற்சியை முறியடித்து விட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

  • vijay is bjp c team explained by vanathi srinivasan விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!