2 மணிக்கு வீடு ஜப்தி நோட்டீஸ்… 3 மணிக்கு அடித்த லாட்டரி ஜாக்பாட்… மீளா இன்பத்தில் திளைக்கும் மீன் வியாபாரி!

Author: Babu Lakshmanan
14 October 2022, 2:11 pm
Quick Share

வங்கி கடனால் வீட்டை இழக்க வேண்டியிருந்த கேரள மீன் வியாபாரி, லாட்டரியில் அடித்த ஜாக்பாட்டால் இன்ப வெள்ளத்தில் மிதந்து வருகிறார்.

கேரள மாநிலம் மைநாகப்பள்ளியை அடுத்த எடவனாசேரி அருகே மீன் வியாபாரம் செய்து வருபவர் பூக்குஞ்சு. இவர் வீடு கட்டுவதற்காக 7 ஆண்டுகளுக்கு முன்பு 7.5 லட்சத்தை வங்கியில் கடனாக வாங்கியுள்ளார். அதனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், அந்தத் தொகை வட்டியுடன் சேர்த்து 9 லட்சமாக அதிகரித்து விட்டது.

இந்தக் கடனை எப்படி கட்டுவது என்று நினைத்து கொண்டிருந்த பூக்குஞ்சுவுக்கு வங்கியில் இருந்து ஒரு நோட்டீஸ் வந்தது. அதில், புதன் கிழமை 2 மணிக்கு வந்த அந்த நோட்டீஸில் வீட்டை ஜப்தி செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், வீட்டை இழக்கப்போவது நிஜம் என உணர்ந்து பூக்குஞ்சு மற்றும் அவரது குடும்பத்தினர் கவலையில் உறைந்து போயிருந்தனர்.

இந்த நிலையில், நோட்டீஸ் வந்த அடுத்த ஒரு மணிநேரத்தில் அதிர்ஷ்டம் அவரது கதவை தட்டிக் கொண்டு வந்துள்ளது. அவர் ஏற்கனவே வாங்கிய லாட்டரியில் பரிசுத்தொகையாக 75 லட்சம் வென்றது தெரிய வந்தது.

இதனால், மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற பூக்குஞ்சு, வீட்டை மீட்பதோடு மட்டுமல்லாமல், பெரிய அளவில் கட்டுவதற்கும், அவருக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்துள்ளது.

Views: - 401

0

0