அவசரப்பட்ட காங்கிரஸ்… உச்சகட்ட அதிருப்தியில் ஆம்ஆத்மி ; I.N.D.I.A. கூட்டணியில் திடீர் சலசலப்பு..!!

Author: Babu Lakshmanan
17 August 2023, 2:05 pm
Quick Share

2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்திய பிறகு காங்கிரஸ் தலைவர் அளித்த பேட்டியினால் ஆம்ஆத்மி கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளது.

2024ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 26 கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இந்தக் கூட்டணிக்கு I.N.D.I.A. என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் பாட்னா மற்றும் பெங்களூரூவில் இருமுறை கூடி ஆலோசனை நடத்தினர்.

இந்த இரு கூட்டங்களில் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த ஆலோசனையின் போது, எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து நாடு முழுவதும் எப்படி போட்டியிடுவது, எதன் அடிப்படையில் இடங்களை ஒதுக்குவது உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டது.

இதனிடையே, 18 மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் அக்கட்சியின் தேசிய தலைமை நேற்று ஆலோசனை நடத்தியது. சுமார் 3 மணிநேரம் நடந்த இந்த ஆலோசனைக்குப் பிறகு, டெல்லியை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் லம்பா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, டெல்லியில் உள்ள மக்களவை தொகுதிகளிலும் போட்டியிட தயாராகும்படி தங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும், டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காக அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் உடனடியாக பணியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

டெல்லி காங்கிரஸ் தலைவரின் இந்த பேச்சு, டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், I.N.D.I.A. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டால், இந்தக் கூட்டணி தேவையா..? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு உடனே பதிலளித்த காங்கிரஸ், கூட்டத்தில் இடஒதுக்கீடு பற்றி எல்லாம் பேசப்படவில்லை என்றும், கட்சியை வலுப்படுத்துவது குறித்து மட்டுமே பேசப்பட்டதாக தெரிவித்தது.

இருப்பினும், நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில், I.N.D.I.A. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் சில நடவடிக்கைகள் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருவதால், இந்தக் கூட்டணி ஒருங்கிணைந்து தேர்தலை சந்திக்குமா..? என்ற சந்தேகம் அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.

Views: - 228

0

0