‘எஸ்.பி.வேலுமணி மீது தொடரப்பட்ட வழக்கிற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்’: அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம்…வழக்கு ஒத்திவைப்பு..!!

Author: Rajesh
2 May 2022, 6:30 pm
Quick Share

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடர்ந்த வழக்கின் மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி தனது சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள், பினாமிகளின் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்களை சட்டவிரோதமாக வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.

எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி அறப்போர் இயக்கம், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து எஸ்.பி.வேலுமணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.பி வேலுமணி தரப்பில், வேலுமணி மீதான வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது, காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்டுள்ளது.

மேலும் இவ்வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கை விவரங்களை தனது தரப்புக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதையடுத்து, தமிழக அரசு தரப்பில், எஸ்.பி.வேலுமணி குற்றம் புரிந்ததற்கான அனைத்து முகாந்திரமும் உள்ளது. சிஏஜி அறிக்கையும் கூட முறைகேடு நடந்ததையே கூறுகிறது. மேலும் இந்த விவகாரம் புனையப்பட்டதோ, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடுக்கப்பட்டதோ அல்ல, டெண்டர் இவரது உறவினர்கள் பெயரிலேயே கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

எஸ்.பி வேலுமணிக்கு எதிரான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. குற்றப்பத்திரிகை விரைவில் தயார் செய்யப்பட்டு தாக்கல் செய்யப்படும் எனவும் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் எஸ்.பி.வேலுமணி தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Views: - 691

0

0