இது சினிமா காட்சியல்ல… குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய காவலர்… டிரெண்டாகி வரும் நெஞ்சை உருக்கும் புகைப்படம்!!!

Author: Babu Lakshmanan
5 April 2022, 11:12 am

தீ விபத்தில் சிக்கிக் கொண்ட குழந்தையை போலீசார் ஒருவர், தனது உயிரைப் பணயம் வைத்து தூக்கி ஓடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ராஜஸ்தானிய புத்தாண்டையொட்டி இந்து அமைப்பினர் கரவுலி என்னும் இடத்தில் பைக் பேரணி நடத்தினர்.

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்தப் பேரணி சென்ற போது, சிலர் கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு கலவரம் வெடித்தது. அப்பகுதியில் இருந்த கடைகள் மற்றும் வீடுகளுக்கு நெருப்பு வைக்கப்பட்டது. இதனால், அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.

இருசக்கர வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இதில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ஷாம்லி காவல்துறை உயரதிகாரி சுகிரிதி மாதவ் மிஸ்ரா, தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

அதில், கான்ஸ்டபிள் ஒருவர் பின்பக்கம் உள்ள கட்டிடங்கள் தீயில் எரிந்து வரும் நிலையில், அவர் குழந்தை ஒன்றை தோளில் சாய்த்தபடி, தூக்கிக் கொண்டு ஓடி வருவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.

அந்தப் புகைப்படத்தோடு,”குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய ராஜஸ்தான் போலீஸைச் சேர்ந்த கான்ஸ்டபிள் நேத்ரேஷ் ஷர்மாவை நினைத்து பெருமையடைகிறேன். இந்தப் புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு நிகரானது,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி, பார்ப்போரின் நெஞ்சை உருகச் செய்துள்ளது.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!