பேப்பர் பிளேட் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : மூச்சு திணறி உரிமையாளர் மற்றும் அவரது மகன் உட்பட 3 பேர் பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2022, 1:32 pm
Fire Accident 3 Dead - Updatenews360
Quick Share

ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள ரங்காச்சாரி தெருவில் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் பாஸ்கர் என்பவர் பேப்பர் பிளேட் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு பணிகள் முடிந்தபின் பாஸ்கர் அவருடைய மகன் டெல்லி பாபு, டெல்லி பாபு நண்பர் பாலாஜி மற்றும் குடும்பத்தினர் தொழிற்சாலையில் பின்புறத்தில் இருக்கும் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

நள்ளிரவு 2 மணி அளவில் மின் கசிவு காரணமாக தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. சற்று நேரத்தில் தொழிற்சாலை முழுவதும் பரவிய தீ வீட்டிலும் பரவி பயங்கரமாக கொழுந்து விட்டு எரிய துவங்கியது.

வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்களால் வெளியில் வர இயலாத நிலை அப்போது ஏற்பட்டது. மேலும் மூச்சு திணறல் ஏற்பட்டு அனைவரும் மயங்கி விழுந்து விட்டனர்.

இதனை கவனித்த அருகில் வசிப்பவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தீயணைப்பு வாகனம் வருவதற்குள் எரிந்து கொண்டிருந்த தீ மேலும் வேகமாக எரிய துவங்கியது.

தீயணைப்பு படையினர் உடனடியாக வருவார்கள் என்று கருதி பொறுத்திருந்த பார்த்த உள்ளூர் மக்கள் வீட்டின் சுவரை உடைத்து உள்ளே புகுந்து சிலரை மீட்டனர்.

அதற்குள் மூச்சு திணறல் ஏற்பட்டு பாஸ்கர், பாலாஜி, டில்லிபாபு ஆகியோர் மரணம் அடைந்து விட்டனர். இந்த நிலையில் அங்கு வந்து சேர்ந்து தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.

மரணம் அடைந்தவர்களின் உடல்கள் தற்போது சித்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த தீ விபத்து பற்றி சித்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை துவக்கி உள்ளனர்.

Views: - 386

0

0