நடிகர் பிரகாஷ்ராஜ் வந்தால் தீட்டா? கோமியம் ஊற்றி கழுவிய மாணவர்கள்.. பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
9 August 2023, 2:28 pm
Prakashraj - Updatenews360
Quick Share

நடிகர் பிரகாஷ்ராஜ் வந்தால் தீட்டா? கோமியம் ஊற்றி கழுவிய மாணவர்களால் பரபரப்பு!!

கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முற்போக்கு சங்கங்கள் இணைந்து திரையரங்கு, சினிமா, சமுதாயம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தினர்.

இதில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ், பேராசிரியர் சந்திரசேகர் அய்யா, சமூக ஆர்வலர் கே.எல்.அசோக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனிடையே, தனியார் அமைப்புகளுக்கு கல்லூரியில் நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்த கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக பாஜக உறுப்பினர்களும், பாஜக மாணவர் அமைப்பை சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்து, கல்லூரிக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாணவர்கள் பிரகாஷ்ராஜிடம் இருந்து கற்று கொள்ள எதுவும் இல்லை எனக் கூறி பாஜகவினரும், பாஜக மாணவ அமைப்பைச் சேர்ந்தவர்களும் கோஷங்களை எழுப்பினர்.

நடிகர் பிரகாஷ் ராஜூக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கல்லூரிக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போராட்டத்தை தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு தொடங்கியுள்ள ஐந்து திட்டங்களை ஆதரித்து பேசினார்.

காங்கிரஸால் தொடங்கப்பட்ட திட்டங்கள் கர்நாடக மக்களுக்கு பயனளிக்கின்றன என்றார். கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்திய திட்டங்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார்.

பிரதமர் மோடியின் திட்டங்கள் நாடு முழுவதும் தோல்வியடைந்துவிட்டன, அதைப் பற்றி யார் பேசுவார்கள் என்றும் பிரகாஷ் ராஜ் கூறினார்.

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகங்களை மாற்றியமைக்கும் அரசாங்கங்கள் பற்றியும் நடிகர் பேசினார். பாடப்புத்தகங்களை மாற்றுவது மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்த பிறகு பிரகாஷ்ராஜ் வெளியே சென்ற பின்னர், கருத்தரங்கு நடந்த அரங்கை பாஜக மாணவர் அமைப்பினர் சிலர், பசு மாட்டின் கோமியத்தைக் கொண்டு சுத்தம் செய்தனர்‌. பாஜக மாணவர் அமைப்பினர் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 394

0

0