ஆரம்பம் எல்லா நல்லாத்தான் இருந்துச்சு.. மீண்டும் பொளந்து கட்டிய மெஹிதி ஹாசன்.. சொந்த மண்ணில் மீசைய முறுக்கும் வங்கதேசம்!!

Author: Babu Lakshmanan
7 December 2022, 4:15 pm

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் சேர்த்தது.

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டாக்காவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி, பந்துவீசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள், வங்கதேச அணியை திணறடித்தனர்.

வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அனமுல் (11), லிட்டன் தாஸ் (7) ஆகியோரின் விக்கெட்டை சிராஜ் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து, ஷாண்டோ (21), ஷகிப் அல் ஹசன் (8), ரஹீம் (12), அஃபிப் ஹுசேன் (0) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால், 19 ஓவர்களில் 69 ரன்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து வங்கதேச அணி தடுமாறியது. பின்னர், 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மகமுதுல்லா, மெஹிதி ஹாசன் இணை, சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தது.

இந்திய பவுலர்களும் இந்த பார்ட்னர்ஷிப்பை முறிக்க பல வழிகளை கையாண்டனர். ஆனால், ஏதும் கைகொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் இருவரும் அரைசதம் அடித்த நிலையில், மகமுதுல்லா 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் விக்கெட்டை இழந்தாலும், மறுமுனையில் மெஹிதி ஹாசன் தனது வேகத்தை குறைக்கவில்லை.

பரபரப்பாக ஆடிய அவர் போட்டியின் கடைசி பந்தில் சதமடித்து, அணியின் ஸ்கோரையும் வெகுவாக உயர்த்தினர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் சேர்த்தது. கடைசி வரை ஆட்டமிழக்காத மெஹிதி ஹாசன் 100 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுக்களும், சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற மெஹிதி ஹாசன் முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!