2வது பாதியில் ஆட்டத்தை மாற்றிய சவுதி அரேபியா… கத்தாரில் அர்ஜென்டினாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

Author: Babu Lakshmanan
22 November 2022, 7:59 pm
Quick Share

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் முதன்மையானது உலகக்கோப்பை கால்பந்து தொடராகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தத் தொடரானது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் எப்போதும் கொண்டிருக்கும்.

இந்த நிலையில் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் சவுதி அரேபியா அணிகள் பலப்பரிட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கிய போதே, அர்ஜென்டினா அணியினர் மிக சிறப்பாக விளையாடினர். ஆட்டத்தின் 10 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திய அணியின் கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார்.

இதற்கு எதிரணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.

தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் சவுதி அரேபியா ஆதிக்கம் செலுத்தியது. சலே அல்ஷெரி 48வது நிமிடத்திலும், சலேம் அல்தாவசாரி 53வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதனால், போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு பின்னர் பதிலடி கொடுக்க அர்ஜென்டினா அணி போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முடிவில் 2-1 என சவுதி அரேபியா அணி வெற்றி பெற்றது.

Views: - 315

2

0