கேரளாவுக்கு க்ரீஷ்மா… குமரிக்கு ஜெஸ்லின் ; புதுகாதலனை கரம்பிடிக்க பழைய காதலனுக்கு காதலி போட்ட ஸ்கெட்ச்… அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
16 November 2022, 1:52 pm
Quick Share

கன்னியாகுமரி அருகே முன்னாள் காதலனை அழைத்த காதலி, கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காதலி உட்பட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பியை அடுத்த மாத்தார் பகுதியை சேர்ந்தவர் பிரவின். டிப்ளமோ முடித்து வெல்டராக பணியாற்றும் இவருக்கு, அணக்கரை பகுதியை சேர்ந்த 19 வயதான ஜெஸ்லின் என்ற கல்லூரி மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பழக்கம் காதலாக மாறி ஒருவருக்கொருவர் நெருங்கி பழகிய நிலையில், ஜெஸ்லின் தனது வீட்டிற்கு வந்து பெண் கேட்கும் படி பிரவினிடம் கூறியுள்ளார். பிரவினும் தனது பெற்றோர்களுடன் சென்று ஜெஸ்லின் வீட்டில் பெண் கேட்டுள்ளார். இதில் இரு வீட்டாரும் சம்மதித்த நிலையில், இரண்டு வருடத்திற்கு பின் திருமணம் செய்து வைக்கலாம் என ஜெஸ்லின் வீட்டார் கூறியுள்ளனர்.

இதனால், நெருக்கம் அதிகரித்த இருவரும் தனிமையாக ஆங்காங்கே கணவன், மனைவி போல் சுற்றி திரிந்து, மாறி மாறி பரிசு பொருட்களை வழங்கி தங்கள் காதலை பலப்படுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் ஜெஸ்லின் கடந்த ஒரு மாதமாக பிரவின் உடனான தொடர்பை மெல்ல மெல்ல விலக்கி கொள்ள, அவரது நடத்தையில் சந்தேகமடைந்த பிரவின் அவரை கண்காணிக்க தொடங்கியுள்ளார். இதில் ஜெஸ்லின் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த டிரைவர் ஜெனித் என்பவருடன் தொடர்பில் இருப்பதையும், அவருடன் பைக்கில் சுற்றி திரிவதையும் கண்ட பிரவின், ஜெஸ்லின்னை கண்டித்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த ஜெஸ்லின், பிரவினிடம் நான் தற்போது ஜெனித்தை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், என்னை மறந்து விடு என்றும் கூறியுள்ளார். இதனால், மனமுடைந்த பிரவின் தான் கொடுத்த பரிசு பொருட்களை திரும்ப கேட்டுள்ளார்.

இந்த நிலையில், பிரவின் உடனான காதலை முறித்து கொண்ட ஜெஸ்லின் பரிசு பொருட்களை திரும்ப தருவதாக கூறி, நேற்று காலை முன்னாள் காதலன் பிரவினை வேர்கிளம்பி பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார்.

பிரவின் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நிலையில், அவரை பின்தொடர்ந்து, புதிய காதலனுடன் ஜெனித்துடன் இருசக்கர வாகனத்தில் வந்த ஜெஸ்லின், ஏற்கனவே திட்டமிட்டப்படி, எதிரே ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் கொண்ட கூலிப்படை கும்பல் பிரவினின் இருசக்கர வாகனத்தை மோதி கீழே தள்ளி விட்டு சரமாரியாக பிரவினை தாக்க தொடங்கினர்.

இதை முன்னாள் காதலி ஜெஸ்லின் புதிய காதலனுடன் ஜெனித்துடன் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நிலையில், அங்கு திரண்ட பொதுமக்கள் காயமடைந்த பிரவினை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தாக்குதல் குறித்து பிரவின் சிசிடிவி ஆதாரங்களுடன் கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், காதலி ஜெஸ்லின், ஜெனித் மற்றும் கண்டால் தெரியும் நபர்கள் 2 பேர் என நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் அவர்களை தேடிவருகின்றனர்.

இந் நிலையில், ஏற்கனவே, கேரளாவில் காதலனுக்கு விஷம் கொடுத்து காதலி கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், முன்னாள் காதலனை காதலியே முன்னின்று கூலிப்படையை ஏவி தாக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 778

0

0