ஒரே நேரத்தில் பள்ளிக் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற 20 பேர் : அரசு அதிகாரி துணையோடு பொதுவழியை ஆக்கிரமித்ததாக புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2022, 5:29 pm
Fire Suicide Attempt - Updatenews360
Quick Share

தருமபுரி : வழிப்பாதை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி 10 குடும்பத்தை சேர்ந்த பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் உட்பட தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தலைமையில் நடந்தது.

இதில் பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி மாவட்டம் முழுவதிலுமிருந்து ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க வந்தனர்.

அப்போது அரூர் அடுத்துள்ள பூதிநத்தம் கிராமத்தை சேர்ந்த 10 குடும்பத்தினர் கடந்த 65 ஆண்டுகளாக தங்களது விவசாய நிலங்களில் வீடுக்கட்டி வாழ்ந்து வருகின்றனர்.

அங்குள்ள பொது வழியை பயன்படுத்தி வந்ததாகவும், தற்போது அங்கு வசித்து வரும் கண்ணன் என்பவரின் குடும்பத்தினர் பொது வழியை ஆக்கிரமித்து தங்களுக்கு வழியை விட மறுத்து வருவதால் விளை நிலங்களில் விளைந்த பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை மற்றும் பள்ளி குழந்தைகள் பள்ளி செல்ல வழியில்லை எனவும் இதனால் 10 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதாக இது குறித்து வருவாய்துறை அதிகாரிகளிடம் பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும் வழிபாதையை ஆக்கிரமித்துள்ளவரின் உறவினர் அரசுதுறையில் பணியாற்றுவதால் தங்களது புகாரை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர்.

இதனால் பொது வழியை ஆக்கிரமித்தவர் மீது நடவடிக்கை எடுத்து பொதுவழி பாதையை மீட்டு தரவேண்டும் என பாதிக்கபட்ட 10 குடும்பத்தினர் இன்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் பள்ளி சீருடையுடன் வந்த நிலையில் திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை கேனை எடுத்து உடல் மீது ஊற்றி தீக்குச்சி எடுத்து பற்ற வைக்க முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினர் தடுத்து காப்பாற்றி இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்ய காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

10 க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தீக்குளிக்க முயற்சி செய்த போது, சரியான நேரத்தில் தீயணைப்பு வீரர் சந்திரன் என்பவர் அவர்களை காப்பாற்றியதால் அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.

Views: - 995

0

0