உதகை மலை ரயிலுக்காக தயாரிக்கப்பட்ட 28 புதிய பெட்டிகள் : வெற்றிகரமாக நடைபெற்ற சோதனை ஓட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 April 2022, 10:55 am

கோவை : பெரம்பூர் தொழிற்சாலையில் தயாரித்த புதிய பெட்டிகளுடன் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலை ரெயில் சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதில் பயன்படுத்தப்பட்ட ரெயில் பெட்டிகள் மிகவும் பழமையானவை. எனவே சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதிய ரெயில் பெட்டிகளை தயாரிக்க ரெயில்வே துறை முடிவு செய்தது.

அதன்படி சென்னை பெரம்பூரில் உள்ள இணைப்பு ரெயில் பெட்டி தொழிற்சாலையில் நீலகிரி மலை ரெயிலுக்காக 28 பெட்டி தயாரிக்கப்பட்டது.

அவை பல்வேறு காலகட்டங்களில் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. புதிய ரெயில் பெட்டிகள் பயணிகள் அமர வசதியாகவும் இயற்கை காட்சிகளை ரசிக்க வசதியாக பெரிய ஜன்னல் கணணாடிகளுடன் உள்ளன.

இந்த நிலையில் புதிதாக தயாரிக்கப்பட்ட ரெயில் பெட்டிகளில் பிரேக் பிடித்தல் தரம், செங்குத்தான மலைப் பகுதிகளில் செல்லும் போது பெட்டிகளின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்வதற்காக உத்தரபிரதேச மாநிலம் லக்னோ ஆர்.டி.எஸ்.ஓ. பரிசோதனை திட்ட ரெயில்வே இயக்குனர் அனஞ்செய் மிஸ்ரா தலைமையில் 13 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை மேட்டுப்பாளையம் வந்தனர்.

அனஞ்செய் மிஸ்ரா உள்பட அதிகரிகள் குழுவினர் மேற்பார்வையில் புதிதாக தயாரிக்கப்பட்ட 4 பெட்டிகள் மலை ரெயில் என்ஜினில் இணைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இதையடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு புதிய பெட்டிகளுடன் மலைரயில் சோதனை ஓட்டமாக காலை 8.45 மணிக்கு புறப்பட்டு சென்றது.

மலைப்பகுதியில் ரெயில் செல்லும் போது வேகம் பிரேக் பிடித்தல் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நேற்று முதல் அடுத்த மாதம் (மே) 8-ந் தேதி வரை பல கட்டமாக சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்த பிறகு புதிதாக தயாரிக்கப்பட்ட மலை ரெயில் பெட்டிகள் மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரெயிலில் இணைக்கப்படும் என்று ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!