தலையை சேற்றில் அமுக்கி மூதாட்டி கொடூரக் கொலை… பின்னணியில் இருந்த கவரிங் நகைகள்… இளைஞர் கைது ; விசாரணையில் அதிர்ச்சி!!

Author: Babu Lakshmanan
10 June 2023, 12:06 pm
Quick Share

திருவாரூர் ; மன்னார்குடி அருகே கோவில் திருவிழாவில் கலைநிகழ்ச்சி பார்த்துவிட்டு நள்ளிரவு வீடு திரும்பிய முதாட்டியை சேற்றில் தலையை அமுக்கி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே ஏத்தக்குடி காலனி தெருவை சேர்ந்தவர் மணியன். இவரது மனைவி லெட்சுமி (85) . இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். கணவர் மணியன் 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இரண்டாவது மகளான அன்பரசி என்பவர் வீட்டில் லெட்சுமி வசித்து வந்தார்.

இந்தநிலையில், வடஏத்தக்குடி மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு இரவு நடந்த கலை நிகழ்ச்சியை பார்ப்பதற்கு சென்ற லெட்சுமி இரவு வீடு திரும்பவில்லை. இதையடுத்து, லெட்சுமியன் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மறுநாள் மதியம் மாரியம்மன் கோயில் அருகே உள்ள அறுவடைக்கு தயாராக இருந்த வயல்வெளியில் பெண் ஒருவரின் சடலம், சேறு சகதியுமாக இறந்த நிலையில் கிடந்ததை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து, அருகில் இருந்த தலையாமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் திருவாரூர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் ராஜேஸ்கண்ணா உள்ளிட்ட காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று லெட்சுமி இறந்து கிடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணையை தொடங்கினார்கள். அப்போது, அங்கு கிடந்த கிழிந்த கைலியை எடுத்து, அது யாருடையது என்பது குறித்து விசாரித்தனர்.

அதனைதொடர்ந்து திருவாரூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் வர வழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, மூதாட்டி லெட்சுமியின் உடலை காவல் துறையினர் கைப்பற்றி மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவில் திருவிழா கலை நிகழ்ச்சி முடித்துவிட்டு நள்ளிரவு வயல் வழியே நடந்து சென்ற மூதாட்டி லெட்சுமி தனியாக வீடு திரும்பியதை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவரை பின் தொடர்ந்து வந்து வழிமறித்து வயிலில் உள்ள சேற்றில் தலையை வைத்து கொலை செய்து அவர் கலுத்தில் உள்ள ஜெயின்,தோடு மற்றும் மூக்குத்தி உள்ளிட்ட 3 பவுன் நகைகளை திருடி சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க ஏதுவாக ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையில் மூன்று தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். அப்போது, கிழிந்த கைலி கணபதி என்னும் 20 வயது இளைஞருடையது என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து விசாரித்ததில், மதுவுக்கு அடிமையான கணபதி, மூதாட்டியில் கழுத்தில் இருந்த நகையை பறித்ததாகவும், அது கவரிங் என தெரிய வந்ததையடுத்து, அவரை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

நகைக்காக முதாட்டியை சேற்றில் அமுக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 266

0

0