கட்டைப்பையில் மறைத்து கோவிலில் குழந்தையை வீசிச் சென்ற கொடூரத் தாய் : பிறந்து 10 நாட்களே ஆன சிசுவை மீட்ட காவல்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
6 April 2022, 3:49 pm

கோவை : பிறந்து 10 நாட்களே ஆன ஆண் குழந்தையை கட்டைப்பையில் வைத்து கோவிலுக்கு அருகே வைத்து சென்ற கொடூரத் தாயை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவையில் கட்டைப்பையில் வைத்து கோவிலில் வைக்கப்பட்ட பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை மீட்டு, மாநகராட்சி அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவை விமான நிலையம் அருகே உள்ள துரைசாமி நகரில், ராஜகணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில், பிறந்து சில தினங்களே ஆன குழந்தை, கட்டைப்பையில் வைக்கப்பட்டு இருப்பதாக காவல் துறையினருக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, பீளமேடு காவல்துறையினரும், சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணனும் கோவிலுக்கு சென்று குழந்தையை மீட்டனர். இதனையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது.

அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் பச்சிளம் குழந்தையை அனுமதித்தனர். அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையை பையில் வைத்து விட்டுச் சென்றவர்கள் யார்..? என்பது குறித்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் குழந்தை, கட்டைப்பையில் வைக்கப்பட்டு கோவிலில் விட்டுச் சென்ற சம்பவத்தால் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?