கோவை எல்லன் மருத்துவமனை அடிதடி வழக்கில் திடீர் திருப்பம் : தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி சரண்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 November 2022, 1:46 pm
Cbe Chennai Hospital - Updatenews360
Quick Share

கோவை சென்னை மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கில் தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் உள்பட 5 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

கோவை காந்திபுரம் 100 அடி ரோடு ஜி.பி.சிக்னல் அருகே எல்லன் மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக டாக்டர் ராமச்சந்திரன் (வயது 75) உள்ளார்.

இவர் இந்த மருத்துவமனையை, சென்னையை சேர்ந்த டாக்டர் உமாசங்கர் என்பவருக்கு லீசுக்கு கொடுத்தார். இதையடுத்து, அந்த மருத்துவமனையின் பெயர் சென்னை மருத்துவமனை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு திடீரென்று 30 பேர் கொண்ட கும்பல் இந்த மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. அத்துடன் அங்கு இருந்த ஊழியர்கள், டாக்டர்களை மிரட்டியதுடன் மருத்துவமனையை சூறையாடிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இது தொடர்பாக, டாக்டர் ராமச்சந்திரன் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். அதில், டாக்டர் உமா சங்கர் தான் கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்தினார் என்று புகார் தந்திருந்தார்.

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், மருத்துவமனையை வாடகைக்கு எடுத்த டாக்டர் உமாசங்கர் தனக்கு ரூ.4 கோடியே 95 லட்சம் வாடகை தராமல் ஏமாற்றியதாகவும், ரூ.100 கோடி மதிப்புள்ள மருத்துவமனையை உமாசங்கர் மற்றும் அவருடைய மேலாளர் மருதவானன் ஆகியோர் விற்பனை செய்ய முயற்சி செய்வதாகவும் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் டாக்டர் ராமச்சந்திரன் புகார் தந்திருந்தனர்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் உமாசங்கர், மருதவானன் ஆகியோரை கைது செய்தனர். வழக்கின் முக்கிய திருப்புமுனையாக, ஜாமீனில் வெளியே வந்த டாக்டர் உமாசங்கர் விபத்தில் உயிரிழந்தார்.

இந்த நிலையில், தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கு கோவை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

அவர்களை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்த போது, டாக்டர் ராமச்சந்திரனுக்கு உறுதுணையாக அடியாட்களை ஏற்பாடு செய்தது கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையின் மாநில தலைவரும், வழக்கறிஞருமான ராஜேந்திரன் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, ராஜேந்திரனை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணைக்கு அழைத்த நிலையில் அவர் தலைமறைவானார். மேலும், வழக்கறிஞர் ராஜேந்திரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் போடப்பட்ட முன் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

வழக்கறிஞர் ராஜேந்திரன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவரைப் பிடிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் மூன்று தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வழக்கறிஞர் ராஜேந்திரன் சரண் அடைந்தார். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 403

0

0