நீதிபதி அறை முன் கஞ்சா போதையில் சேட்டை செய்த வாலிபர் : நீதிமன்றத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
17 May 2023, 8:16 pm
Cbe Court -Updatenews360
Quick Share

கோவை பாப்பநாய்கன்பாளையம் பகுதியை சேர்ந்த அபிலேஷ் இவர் மீது கஞ்சா விற்றதாக வழக்கு நிலுவையில் உள்ளது.இந்த வழக்கு தொடர்பாக இன்று காலை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.

நீதிமன்ற வளாகத்திற்கு வந்தவர் கஞ்சா போதையில் அங்கும் இங்குமாக தள்ளாடி கொண்டே வந்துள்ளார். மேலும் நீதிபதி அறை முன்பு நின்று கொண்டு பல்வேறு சேட்டைகளை செய்துள்ளார்.

இதனையடுத்து நீதிமன்ற ஊழியர்கள் கண்டித்துள்ளனர். எனினும் போதை தலைக்கு ஏறியதால் சேட்டைகள் தொடர்ந்ததால் பந்தய சாலை காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

தொடர்ந்து சேட்டை செய்த அபிலேஷை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.இந்த காட்சிகளை அங்குள்ளவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நீதிமன்றம் வளாகம் அருகே நடைபெற்ற கொலை சம்பவம்,நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவங்களை தொடர்ந்து நீதிமன்ற வாயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளே வருபவர்கள் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் கஞ்சா போதையில் ஒருவர் நீதிமன்றத்திற்குள் வந்தது பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது.

Views: - 330

0

0