காதல் திருமண விவகாரத்தில் திருப்பம்… எம்எல்ஏ ஜெகன்மூர்த்தியின் ஆதரவாளர் ‘ஸ்வீட்’ குமார் தலைமறைவு!
Author: Udayachandran RadhaKrishnan20 June 2025, 4:46 pm
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம் வாயிலாக காதலித்து பதிவு திருமணம் செய்தனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் விஜயஸ்ரீயின் பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த காதல் விவகாரம் தொடர்பாக விஜயஸ்ரீயின் தந்தை வனராஜ் சென்னை பூந்தமல்லி ஆண்டர்சன் பேட்டையைச் சேர்ந்த புரட்சி பாரதம் கட்சித் தலை வரும் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தி உதவியை நாடியதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து கூடுதல் டி.ஜி.பி ஜெயராம் அரசு காரில், தனுசின் தம்பியான இந்திரச்சந்த் என்பவரை கடத்தி மீண்டும் வீட்டின் அருகே இறக்கி விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கூடுதல் டி.ஜி.பி. ஜெயராம், பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. ஆகியோரிடம் விசாரணை நடத்தி தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. பூவை ஜெகன்மூர்த்தியிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கடத்தப்பட்ட இந்திரச்சந்த் தாய் லட்சுமி அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த திருவாலங்காடு போலீசார் கடத்தலில் தொடர்புடையதாக 5 கார்களை தேடினர். இதில் 3 கார்கள் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் சிறுவன் கடத்தலில் பேரம்பாக்கத்தை அடுத்து உள்ள இருளஞ்சேரியை சேர்ந்த புரட்சி பாரதம் கட்சி நிர்வாகியான ‘சுவீட்’ குமார் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இவர் கடத்தலுக்கு பயன்படுத்திய கர்நாடகா பதிவு எண் கொண்ட காரை திருவாலங்காடு போலீசார் பறிமுதல் செய்தனர்.
சுவீட் குமாரின் நண்பரான தக்கோலத்தை அடுத்த உரியூர் பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரது வீட்டில் இருந்து இந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. சுவீட் குமார்தான் சிறுவனை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வெளியில் அழைத்து வந்து கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
தலைமறைவாக உள்ள ஸ்வீட் குமாரை போலீசார் தேடி வருகின்றனர். வன ராஜா, கணேசன், மணிகண்டன், மகேஷ்வரி, சரத்குமார் உட்பட 5 பேரை ஏற்கனவே காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.