அதிமுக ஊராட்சிமன்ற பெண் தலைவரின் 8 பவுன் தாலி சங்கிலி பறிப்பு ; ஹெல்மெட் கொள்ளையர்கள் கைவரிசை..!

Author: Babu Lakshmanan
20 December 2022, 1:26 pm
Quick Share

வேலூர் ; வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஊராட்சிமன்ற பெண் தலைவரிடம் 8 பவுன்தாலி செயினை ஹெல்மெட் கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர் இமகிரிபாபு. அ.தி.மு.க.பிரமுகர் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினராகவும் உள்ளார். இவரது மனைவி மமதா (40). ராஜாகுப்பம் ஊராட்சி மன்ற தலைவரான இவர், குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

நேற்று இரவு ஊராட்சி மன்ற தலைவர் மமதா, தனது வீட்டின் வெளியே அக்கம் பக்கத்தினர் உடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த இரண்டு மர்ம நபர்கள், மமதா அருகே வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியுள்ளனர்.

இதனால்அதிர்ச்சியடைந்த அவர் திருடன் திருடன் என கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் ஹெல்மெட் கொள்ளையர்கள் தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து உடனடியாக குடியாத்தம் நகர போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் டி.எஸ்.பி. ராமமூர்த்தி, டவுன் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்டோர் தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டு, போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஊராட்சி மன்ற தலைவியிடம் தாலி செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 754

0

0