அதிமுகவினர் மீது பொய்வழக்கு பதிந்த போலீசார்: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தொண்டர்கள்..!!

Author: Rajesh
14 February 2022, 10:22 am

கோவை: அதிமுக தொண்டர்களை கைது செய்ததை கண்டித்து கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தை அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதியில் பொதுமக்களுக்கு தி.மு.க.,வினர் நேற்று ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட பரிசு பொருட்களை விநியோகம் செய்து வந்தனர். இதனை தொடர்ந்து அதிமுக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் உட்பட அதிமுகவினர் இதனை கண்டித்தனர்.

இந்த சூழலில், கல்யாணசுந்தரம் உட்பட அதிமுகவினர் ஒன்பது பேரை கைது செய்த போலீசார் ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு அவர்களை அழைத்து வந்து அமர வைத்தனர்.

இந்த சூழலில் தேர்தல் விதிகளை மீறி பரிசுப் பொருட்களை விநியோகித்தவர்கள் மீது வழக்கு பதியாமல் அதிமுக தொண்டர்கள் மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறி ராமநாதபுரம் காவல் நிலையத்தை எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜூனன், பி.ஆர்.ஜி.அருண்குமார் மற்றும் கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் தொண்டர்களுடன் வந்து முற்றுகையிட்டனர்.

மேலும் காவல் நிலைய வளாகத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும், கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் கோவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனிடையே காவல் நிலையத்தில் அமர வைக்கப்பட்ட அதிமுக தொண்டர்களை போலீசார் வெளியேவிட்டனர்.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.,வினரை காரணம் இல்லாமல் கைது செய்துள்ளனர் என்று கூறி பரிசு பொருட்கள் விநியோகம் செய்த தி.மு.க.,வினரை கைது செய்ய வேண்டும் என்றும் அதுவரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று கூறி தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு குற்றப்பிரிவு துணை ஆணையர் உமா தலைமையிலான போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

காவல் நிலையத்தை அதிமுக தொண்டர்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ராமநாதபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!