தமிழகத்தில் பள்ளிகளில் தமிழில் பேசினால் அபராதம்… தாய்மொழியைக் கேவலப்படுத்தும் திமுக அரசு ; பாஜக பிரமுகர் காட்டம்!!

Author: Babu Lakshmanan
18 October 2022, 8:29 pm
Quick Share

சாதி சான்றிதழுக்காக ஒருவர் தீக்குளித்து இறந்தது வருத்தமளிப்பதாகவும், அரசு அடித்தட்டு மக்களுக்கும் சாதி சான்றிதழ் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என பாஜக பட்டியல் அணி மாநில தலைவர் தடா.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம்,வேலூரில் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி பெருகோட்டம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டமானது மாநில தலைவர் தடா பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக நிர்வாகிகள் கே.ஜி.குட்டி, சக்கரவர்த்தி, ஜெகன், மனோகரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

பின்னர் பாஜக பட்டியல் அணி மாநில தலைவர் தடா. பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது :- தமிழகத்தில் பட்டியலின கோட்ட கூட்டங்களை நடத்தி வருகிறோம். மத்திய அரசு அளிக்கும் சிறப்பு உட்கூறு நிதியை நடைமுறைப்படுத்தாமல், மனம் போன போக்கில் செயல்பட்டது தான் திமுக அரசு. எஸ்,சி.எஸ்டி ஆணையர் காம்ளே குற்றம்சாட்டிய அரசு திமுக அரசு. இன்றைக்கு பொய்யை சொல்லி பெண்களுக்கு ஆயிரம் தருவோம், பஞ்சமி நிலத்தை மூடுவோம், மதுவை ஒழிப்போம் என சொல்லிவிட்டு பெண்களுக்கு பார் திறக்கும் அவலம் உள்ளது.

தமிழகம் போதைக்கு செல்கிறது. இதனை தமிழக அரசு மாற்றி கொள்ள வேண்டும். திமுக திராவிட மாடல் என கூறி, ஹிந்தியை எதிர்ப்பதாக கூறி நாடகமாடுகின்றனர். இன்றைக்கு சி.பி.எஸ்.சி மெட்ரிக் பள்ளிகளில் ஹிந்தி கற்பிக்கின்றனர். ஆனால், அங்கு தமிழில் பேசினால் அபராதம். இன்றைக்கு தமிழை கேவலப்படுத்தும் அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. இவர்கள் தனக்கு மட்டும் ஹிந்தி தெரியும் என வைத்துகொள்கின்றனர். கனிமொழியும் ஹிந்தியில் புலமை பெற்றுள்ளார். ஆனால் பட்டியல் சமுதாயமோ, சிறுபான்மை சமுதாயமோ, ஹிந்தி படிக்க கூடாது என போலி நாடகமாடுகின்றனர்.

திராவிட மாடல் அரசில் சட்டம் ஒழுங்கில்லை. 2024-2026 ஆகிய ஆண்டுகளில் பாஜக எதிர்காலத்தில் தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக பாஜக மாறும். திராவிட மாடல் அரசு மாயை ஒழிப்போம். இது மக்களுக்கான அரசு என்பதை நாங்கள் உருவாக்குவோம். பஞ்சமி நிலங்களை மீட்க தமிழக அரசு தனி சட்டம் கொண்டு வரவேண்டும். சாதி சான்று கிடைக்கவில்லை என தமிழகத்தில் தீகுளித்து ஒருவர் இறந்துள்ளார். மலைவாழ் மக்களுக்கு சரியாக சாதி சான்று கிடைக்காதது வருத்தமளிக்கிறது.

நீதிமன்ற வளாகத்தில் இந்த சம்பவம் நடந்தது. தமிழக அரசு பட்டியல் இன அடித்தட்டு மக்களுக்கு சாதி சான்றிதழ் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். அரசு பணியிடங்களில் இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றப்படவில்லை. 19 சதவிகிதம் கிடைக்கவில்லை. ஸ்டாலின் இட ஒதுக்கீடு சமூக நீதி என்று கூறுகிறார். இதுவரையில் 6 சதவிகிதம் கூட நிரப்பப்படவில்லை. ஸ்டாலின் அவர்கள் 19 சதவிகிதத்தை உடனடியாக நிரப்ப வேண்டும், என்று கூறினார்.

Views: - 809

0

0