மாதாமாதம் ரூ.5,000 கேட்டு மிரட்டும் திமுக கவுன்சிலர்… அம்மா உணவக ஊழியர்கள் ஆட்சியரிடம் புகார் மனு!!

Author: Babu Lakshmanan
11 January 2023, 7:43 pm
Quick Share

அம்மா உணவகத்தில் பணியில் தொடர வேண்டுமானால் மாதாமாதம் ரூ.5,000 கேட்டு திமுக கவுன்சிலர் மிரட்டுவதாக அதன் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

சேலம் மாநகரின் 11 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு அம்மா உணவகத்திலும் 12 பேர் பணி புரிந்து வருகின்றனர். இரண்டு ஷிப்டுகளில் 6 பேர் வீதம் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், சேலம் 50வது வார்டுக்கு உட்பட்ட மணியனூர் பகுதியில் இயங்கி வரும் அம்மா உணவகத்தின் பணி புரிந்த ஆறு பெண்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தனர்.

புகார் மனு அளித்துவிட்டு இது குறித்து அவர்கள் கூறும்போது :- நாங்கள் ஐம்பதாவது வார்டுக்கு உட்பட்ட மணியனூர் பகுதியில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் 12 பேர் பணிபுரிந்து வருகிறோம். இரண்டு ஷிப்டுகளில் ஆறு பேர் விதம் பணிபுரிந்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறோம். தற்போது திடீரென ஆறு பேரை நீக்குவதாக கூறி திமுக கவுன்சிலரும் மண்டல குழு தலைவருமான அசோகன் தெரிவிக்கிறார்.

நாங்கள் மக்களுக்காக சேவை செய்து வருகிறோம். அம்மா உணவகத்தின் ஒரு சில மாதங்களில் எங்கள் குழுவில் உள்ள 12 பேரும் சேர்ந்து பணம் போட்டு மக்களுக்காக உணவை வழங்கி வந்துள்ளோம். தற்போது பணியில் நீட்டிக்க மாதம் 5000 ரூபாய் கேட்டால் எவ்வாறு வழங்க முடியும். இந்த சம்பளத்தை வைத்து தான் குடும்பம் வாழ்ந்து வரும் நிலையில், பணம் கொடுக்க வேண்டுமென மிரட்டுவது எங்களுக்கு மிகவும் வேதனையாக உள்ளது, என தெரிவித்தனர்.

இது குறித்து மண்டல குழு தலைவர் அசோகன் அவர்களிடம் கேட்டபோது, தொடர்ந்து பணியில் அமர்த்த வேண்டுமென்றால், மாதம் 5000 ரூபாய் வீதம் தனக்கும், கவுன்சிலர் பழனிச்சாமி என்பவருக்கும் வழங்க வேண்டும். இல்லையென்றால் வேலையில் நீடிக்க முடியாது எனவும் மிரட்டி வருகிறார்.

எனவே எங்களை தொடர்ந்து பணியில் அமர்த்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் அம்மா உணவகத்தை நீக்க மாட்டோம். பணிபுரிந்து வருபவர்கள் தொடர்ந்து பணியில் இருக்கலாம் என அறிவித்திருந்த நிலையில், தற்போது திமுகவினர் இவ்வாறு எங்களை மிரட்டுவது மிகவும் வேதனை அளிக்கிறது, என தெரிவித்தார்.

Views: - 532

0

0