பாரதியார் பல்கலை.,க்குள் உலா வரும் மர்ம நபர்கள்… பீதியில் மாணவிகள்…. அதிர்ச்சி வீடியோ !!

Author: Babu Lakshmanan
13 April 2022, 11:39 am
Quick Share

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவிகள் தங்கும் விடுதி அருகே மர்ம நபர் சுற்றித்திரியும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மருதமலை பகுதியில் இயங்கி வரும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் இரண்டாயிரத்து மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக நள்ளிரவில் வீடுகளுக்குள் புகும் வெளிநபர்கள், மாணவிகளின் ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு மாணவிகளின் அறை கதவை தட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனிடையே கடந்த 31ஆம் தேதி பல்கலைக்கழக வாயிலின் முன் திரண்ட மாணவிகள், திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பல்கலைகழக துணைவேந்தர் மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் விடுதிகளில் வளாகத்தின் கூடுதலாக பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவர் எனவும் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தி தரப்படும் எனவும் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை மேற்கொள்வர் எனவும் உறுதியளித்ததன் பேரில் மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதனிடையே மாணவிகள், விடுதி வளாகத்திற்குள் வெளிநபர் சுற்றித் திரிவதாக வெளியிட்ட புகைப்படத்திற்கு பல்கலைக்கழக நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு மர்ம நபர் விடுதி வளாகத்திற்குள் சுற்றித்திரியும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. விடுதி மாணவி ஒருவர் அந்த வீடியோவை பதிவு செய்ததுடன், இது தொடர்பாக வடவள்ளி போலீசாருக்கும் தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த மர்ம நபரை தேடியதோடு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது அந்த வீடியோவானது வெளியாகி உள்ள நிலையில் அதில் மர்ம நபர் விடுதி கட்டடத்தின் அருகே நடந்து சென்ற விடுதியின் நுழைவு வாயிலை கடந்து செல்வது தெளிவாக பதிவாகியுள்ளது. ஏற்கனவே வெளியான புகைப்படத்துக்கு பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், தற்போது இந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 884

0

0