திருமணத்திற்கு மறுத்த விதவை காதலி: ஆபாச படத்தை இணையத்தில் வெளியிட்ட காதலன் கைது!!

Author: Rajesh
14 May 2022, 10:20 am
Quick Share

புதுச்சேரி: திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் அடைந்து இளம் பெண்ணின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞரை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி வில்லியனூரை வடமங்கலம் அருகே பூஞ்சோலைக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (24). இவர் வில்லியனூரில் காய்கறிகடை வைத்துள்ளார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 25 வயதான பெண் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்து விட்ட நிலையில், ஜெயக்குமாரும் அந்த பெண்ணுடன் நெருங்கி பழகி காதலாக மாறியதால், இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர்.

இதற்கிடையே ஜெயக்குமாரின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த பெண் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். மேலும் ஜெயக்குமாருடன் பழகுவதை தவிர்க்க அந்த பெண் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் ஜெயக்குமார் அந்த பெண்ணுடன் செல்போனில் பேசி தன்னை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த வேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார்.

அதற்கு அந்த பெண் சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் அந்த பெண்ணுடன் தனிமையில் ஒன்றாக இருந்த ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடப்போவதாக மிரட்டியுள்ளார். இந்த மிரட்டலுக்கு அந்த பெண் பணியவில்லை என்பதால் ஜெயக்குமார் அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்த ஆபாச படத்தை அந்த பெண்ணின் உறவினர்களுக்கும் மற்றும் சமூகவலைதளத்திலும் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்து அந்த பெண் மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட பெண் வில்லியனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர்.

Views: - 795

0

0