ஓடும் ரயிலில் இருந்து கல்லூரி மாணவியிடம் செல்போன் பறிப்பு… தடுமாறி விழுந்த மாணவி : உருக்குலைந்த தலைநகரம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
8 July 2023, 4:59 pm

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. 8 பெட்டிகளை கொண்டதாக இயக்கப்படும் இந்த ரயில்களில் பீக் நேரங்களில் தவிர பிற நேரங்களில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருக்கும்.

மிகவும் பிரம்மாண்டமாக காணப்படும் ரயில் நிலையங்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை என்பது பயணிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களில் ஒன்றாக உள்ளது.

பயணிகள் பாதுகாப்புக்காக போலீசார் போதிய அளவில் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை என்பதோடு சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் கூட பல ரயில் நிலையங்களில் இல்லை என்பதே பயணிகள் கருத்தாக உள்ளது.

இதனால், சட்ட விரோத செயலில் ஈடுபடும் நபர்களின் நடமாட்டமும் அதிகரித்து இருப்பதாக சொல்லப்படும் நிலையில், கடந்த 2 ஆம் தேதி பறக்கும் ரயிலில் சென்று கொண்டிருந்த மாணவியிடம் செல்போன் பறிக்க கொள்ளையர்கள் முயன்றனர்.

இதில் தடுமாறி கீழே விழுந்த மாணவி சிகிச்சை பலனிளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

இந்த சோக சம்பவம் குறித்து விசாரணையில், கோட்டூர் புரத்தை சேர்ந்த மாணவி பிரீத்தி கடந்த 2 ஆம் தேதி கடற்கரையில் இருந்து வேளச்சேரி நோக்கி வந்த பறக்கும் ரயிலில் சென்று கொண்டு இருந்தார்.

ரயில் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே வந்த போது மாணவியிடம் இருந்து செல்போனை பறித்த இரு நபர்கள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார்.

செல்போன் பறிப்பின் போது ரயிலில் இருந்து தடுமாறி ப்ரீத்தி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த மாணவி ப்ரீத்தி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருவான்மியூர் ரயில்வே போலீசார், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பழைய சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் பெயர்களையும் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் சென்னை பட்டினப்பாகத்தை சேர்ந்த விக்னேஷ், அடையாரை சேர்ந்த மணிமாறன் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் தான் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
அவர்களிடம் இருந்து மாணவியின் செல்போனும் கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!