திமுகவுக்கு ஜால்ரா போடாம மக்கள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வையுங்க : காங்., கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து எஸ்.பி. வேலுமணி விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
8 July 2023, 4:27 pm
SP Velumani - Updatenews360
Quick Share

தமிழகத்தில் பொது பிரச்சனைகள் குறித்து திமுக கூட்டணி கட்சிகள் பேசுவதில்லை எனவும் திமுக எதை செய்தாலும் ஜால்ரா போட்டு வருவதாகவும் முன்னால் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ் பி வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் திமுக, காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 200 க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இனைந்தனர்.

கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர் மாவட்ட செயலாளரும் கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுனன், அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் தோப்பு அசோகன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் , குறிப்பாக கல்லூரி மாணவர்கள் எடப்பாடியார் தலைமையை ஏற்று இன்று அதிமுகவில் இணைந்துள்ளதாகவும் மேலும் தமிழகம் முழுவதும் சாரை சாரையாக யாரும் மாற்றுக் கட்சியில் சேர்வதில்லை.

எடப்பாடியார் அதிமுக பொதுசெயலாளர் ஆனதில் இருத்து அனைவரும் அதிமுகவில் தான் சேருகின்றனர் என்றும் பெருமிதத்துடன் கூறினார்.. கோவை மாவட்டத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை கடந்த அதிமுக ஆட்சியில் செய்ததாகவும் ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த திட்டமும் திமுக அரசு செய்யவில்லை மாறாக சொத்து வரி உயர்வு , மின் கட்டண உயர்வு போன்றவை மக்களை பாதித்துள்ளது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் எடப்பாடியார் தமிழகத்திற்கு முதல்வராக வரவேண்டும் என அனைத்து மக்களும் நினைப்பதாகவும் அதனால்தான் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களும் இளைஞர்களும் அதிமுகவில் இணைகின்றனர் என்றும் கூறினார்.

மேலும் கோவை குனியமுத்தூர் பகுதியில் தனியார் கல்லூரியில் சுவர் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்த நிலையில் தமிழக அரசு உடனடியாக ஐந்து பேரின் குடும்பத்தினருக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் கல்லூரி நிர்வாகமும் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

விதிமுறைக்கு உட்பட்டு இதுபோன்று கட்டிடங்கள் கட்டப்படுகிறதா என்பதை ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதேபோல் கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார் சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் காவல்துறை பெண் காவலர் துன்புறுத்தபட்டார் என்வும் சுட்டிக்காட்டிய அவர், காவல் துறையில் தொடர்ந்து தற்கொலைகள் நடப்பதாகவும் காவல்துறையினருக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.

டிஐஜி மன உளைச்சலில் இருந்தார் என்று அவரை கூப்பிட்டு விடுப்பு அளித்திருக்க வேண்டும் எனவும் இப்போது இருக்கும் அரசு அதிகாரிகளுக்கு பல அழுத்தங்களை கொடுத்திருப்பதாக சொல்கின்றனர் என்றும் கூறினார்.

நல்ல காவல்துறை அதிகாரியை இழந்திருக்கிறோம் என்பதால் சிபிஐ விசாரணை வேண்டும் என எடப்பாடி கேட்டிருக்கிறார் எனவும் சிபிஐ தலையிட்டு இதில் உள்ள உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் எதனால் தற்கொலை செய்து கொண்டார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

டிஐஜி மரணம் தொடர்பாக முரண்பாடான தகவல்கள் இருப்பதால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் எனவும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

திமுக ஊழல்கள் குறித்து திமுக கூட்டணி கட்சிகள் பேசுவதில்லை எனவும் பாஜகவின் அடிமை என அதிமுகவை பேசிக்கொண்டு இருந்தார்கள் ஆனால் காவிரி பிரச்சனை வந்தபோது 23 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கியது அதிமுக எனவும் பொது பிரச்சனை என வரும் பொழுது மக்கள் பக்கம் நிற்கின்றோம் எனவும் சுட்டிக்காட்டினார்.

தற்போது திமுகவை எதிர்த்து யாரும் பேசுவதில்லை என்றும் ஆனால் திமுக மோசமான ஆட்சி என மக்கள் முடிவு செய்து விட்ட சூழலில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் எப்பொழுது நடந்தாலும் 200 தொகுதிகளுக்கு மேல் அதிமுக வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

அண்ணன் வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆகியோர் இப்போது பேசுவதே இல்லை என்றும் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தலைவர்கள் திமுக என்ன செய்தாலும் அடிமையாக ஜால்ரா போட்டுக் கொண்டிருக்கின்றனர் எனவும் விமர்சித்தார். பொது பிரச்சினைகளுக்கு திமுக கூட்டணி கட்சிகள பேசுவதில்லை எனவும் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டை முன்வைத்தார்.

Views: - 267

0

0