வீட்டின் பூட்டை உடைத்து 28 சவரன் நகை கொள்ளை : பொறியாளர் வீட்டில் திருடர்கள் கைவரிசை!!

Author: Babu Lakshmanan
30 May 2022, 10:12 pm
Quick Share

சென்னையில் பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 28 சவரன் நகையும், 5 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொளத்தூர் ராஜமங்கலம் செந்தில் நகரில் வசித்து வருபவர் ரூப் கிருஷ்ணன் (44). இவர் சிறுசேரியில் உள்ள தனியார் கம்பெனியில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கடந்த 26ம் தேதி வியாழக்கிழமை அன்று வீட்டை பூட்டிக் கொண்டு, கேரளாவில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, அப்படியே கோவில் சுற்றுலாவிற்கு மதுரை, மூணாறு ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளனர்.

இதனை அடுத்து அவரது உறவினர் ஒருவர் வீடு திறந்து கிடக்கிறது என்று அவரிடம் தொலைபேசியில் கூறவே, உடனே அனைவரும் புறப்பட்டு சென்னை கொளத்தூரில் வீட்டிற்கு விரைந்து வந்தனர். இன்று வீட்டிற்கு வந்து பொறியாளர் கிருஷ்ணா, வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 28 சவரன் தங்க நகைகளும், 5,000 ரூபாய் பணமும் திருடு போயிருந்தது தெரிய வந்தது.

உடனே இது குறித்து அவர் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். இதுபற்றி கைரேகை நிபுணர்களுக்கு விபரம் தெரிவிக்கப்பட்டு மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

இது குறித்து ராஜமங்கலம் போலீசார் சிசிடிவி கேமராக்களில் பதிவுகளை வைத்து மர்ம நபர் ஒருவர் திருடப்பட்ட வீட்டில் அருகே சாலையில் சாவகாசமாக நடந்து சென்றது பதிவாகியுள்ளது. அந்த கண்காணிப்பு கேமரா அடிப்படையில் அந்த காட்சிகளை வைத்து போலீசார் அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Views: - 442

1

0