‘அம்பேத்கர் எங்கள் காவித் தலைவன்’ ; நீதிமன்றத்திற்கு வந்த அர்ஜுன் சம்பத்திற்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு..!!

Author: Babu Lakshmanan
6 December 2022, 6:23 pm
Quick Share

சென்னை ; டாக்டர் அம்பேத்கரை காவித் தலைவன் என குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் கோஷம் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்து மக்கள் கட்சி தரப்பில் அம்பேத்கருக்கு காவி உடை அணிந்து, விபூதி குங்குமம் வைத்து இருப்பது போன்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இதற்கு கடும் கண்டனம் வலுத்த நிலையில், அம்பேத்கர் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி கோரிய வழக்கு விசாரணைக்காக சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்த முயற்சித்துள்ளார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர்கள், அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் சுவரொட்டி ஒட்டிய அர்ஜூன் சம்பத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அம்பேத்கர் சிலை இருந்த பகுதியில் இருந்து கோஷங்களை எழுப்பியபடியே, அர்ஜூன் சம்பத் வெளியேறும்படி பின்தொடர்ந்து வந்தனர்.

வழக்கில் ஆஜராக அனுமதி சீட்டு பெற்று வந்துள்ள தன்னை ஏன் வெளியேற்றுகிறார்கள் என காவல்துறையினரிடம் அர்ஜூன் சம்பத் கேள்வி எழுப்பினார்.

அம்பேத்கர் சிலையிலிருந்து என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள பார் கவுன்சில் கட்டிடம் வரை இந்து மக்கள் கட்சிக்கு எதிராகவும், அந்த சம்பத்துக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பிய வழக்கறிஞர்கள், அர்ஜுன் சம்பத் கிளம்பிய பின்னர் கலைந்து சென்றனர்.

Views: - 420

0

0