விபத்தில் இருந்து தப்பிய சேரன் எக்ஸ்பிரஸ்.. அதிகாலையில் ரயிலை கவிழ்க்க சதி!!
Author: Udayachandran RadhaKrishnan9 June 2025, 2:01 pm
கோவை ரயில் நிலையத்தில் இருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் தினமும் 100 – க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள், பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தினமும் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் கோவை ரயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில் நேற்று காலை கோவை ரயில் நிலையம் பகுதியில் ரயில் நிலையத்திற்கும் வரும் ரயில்கள் வருவதற்கு சிக்னல் கோளாறு ஏற்பட்டது.
உடனடியாக அப்பகுதியில் சென்ற ரயில்வே ஊழியர்கள் ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்திற்கு பாதைகளை மாற்றிவிடும் இடத்தில் கற்கள் வைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே காவல் துறையினர், ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த நான்கு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். ரயில்வே காவல் துறையினர் நடத்திய விசாரணையில் வின்சன் ராஜா, விஜய் சங்கர், சதீஷ்குமார் மற்றும் புவனேஸ்வரன் என்பதும், இவர்கள் நான்கு பேரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும், அதில் சதீஷ்குமார் என்பவரின் சகோதரர் தொண்டாமுத்தூர், தென்னம்பாளையம் பகுதியில் இருப்பதால் அவரைப் பார்ப்பதற்காக நேற்று கோவை வந்ததாகவும், சதீஷின் சகோதரரை தொடர்பு கொண்ட போது செல்போனை எடுக்கவில்லை எனக் கூறியவர்கள். இதனால் அந்த நான்கு பேர் டாஸ்மார்க் சென்று மது அருந்தி உள்ளனர்.
இந்நிலையில் பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கு, பதிலாக ரயில் நிலையத்திற்கு போதையில் வந்ததாகவும், மேலும் நேற்று இரவு முழுவதும் ரயில் நிலையப் பகுதியில் சுற்றி திரிந்த அவர்கள், இன்று காலை கழிவறைக்கு செல்வதற்காக ரயில் நிலையத்தில் ரயில் உள்ள பிளாட்பார்ம் பாதைகளை மாற்றிவிடும் தண்டவாள பகுதிக்குச் சென்று அவர்கள், மது போதையில் செய்வதறியாது ரயில் பிளாட்பார்ம் பாதைகளை மாற்றிவிடும் தண்டவாளத்தில் இரண்டு, மூன்று கற்களை வைத்து உள்ளதாக ரயில்வே காவல்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இதனால் இங்கு 6.00 மணிக்கு வர வேண்டிய சேரன் எக்ஸ்பிரஸ் சிக்னல் இல்லாமல் காலை ஏழு மணிக்கு வந்து உள்ளது. காலம் தாமதமாக வந்ததால் கோவையில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது சேரன் எக்ஸ்பிரஸ் ரயில், இதை அடுத்து அந்த நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்த ரயில்வே காவல் துறையினர் அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.