தாமிரபரணி ஆற்றின் வாய்க்கால்களில் இருந்து நீர் திறப்பு…! முதலமைச்சர் அறிவிப்பு
15 August 2020, 10:08 pmசென்னை: தாமிரபரணி ஆற்றின் வாய்க்கால்களில் இருந்து நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை, தூத்துக்குடியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் 11 வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதே போன்று பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறக்கவும் அவர் ஆணையிட்டுள்ளார்.
குடிநீர், இதர பயன்பாட்டிற்காக வரும் 31ம் தேதி வரை 1,693.44 மி.கன அடி நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதே போன்று, மேட்டூர் அணையிலிருந்து வரும் 18ம் தேதி முதல் புள்ளம்பாடி, புதிய கட்டளைமேட்டு கால்வாய்களில் தண்ணீர் திறக்க ஆணையிட்டுள்ளார்.
வரும் 18ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை கிட்டத்தட்ட 136 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன் மூலம் திருச்சி, தஞ்சை, அரியலூர் போன்ற மாவட்டங்களில் 42 ஆயிரத்து 736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும், விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற கேட்டுக்கொள்கிறேன் என்றும் முதலமைச்சர் தமது செய்திக்குறிப்பில் கூறி உள்ளார்.